Wednesday, February 2, 2011

பிரியாணி சட்டி 02.02.2011

ஹலோ எவிரிபடி! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சு... :) நிறைய சோம்பலும், கொஞ்சம் வேலைகளும் இருந்ததால பிரியாணி சட்டிய திறக்க கேப் விட்டுடுச்சு..

***
இறைவன் அருளால் ஒரு பாஸ்போர்ட்டோட ஊருக்கு போயி, இரண்டு பாஸ்போர்ட்டோட வந்து சேர்ந்தாச்சு. (வந்து சேர்ந்து மூணு மாசம் ஆவுது-எல்லாம் ஒரு சோம்பல் தான்) குட்டியோடவே இப்ப நேரம் சரியா இருக்கு. வயித்து புள்ளையோட எங்க வேணும்னாலும் போகலாம், கைப்புள்ளையோட பக்கத்துல போகக்கூட கஷ்டம்னு பெரியவங்க சொன்னது சரியாத்தான் இருக்கு. ஸ்கூல்ல, காலேஜுல, ஏன் ஆஃபீஸ் ல கூட அப்பப்பா டகால்டி வேலை செஞ்சு கட் அடிக்கலாம், ஆனா நம்ம ஜூனியர் கிட்ட ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. நானும் பையன் அவங்க வாப்பா மாதிரி சமர்த்தா வரனும்னு துவா கேட்டுட்டே இருந்தேன்.. ஆனா பாக்கத்தான் வாப்பா மாதிரி, ஆக்டிவிட்டீஸ் எல்லாம் ம்மா மாதிரின்னு மாப்பு சொல்றாங்கப்பா!

***

இங்க என் சமையல சகிக்காம காய்ஞ்சு போயி, அங்க வீட்டுக்கு போனா, அங்க‌யும் போய் ரொம்ப‌ ஃபீல் ப‌ண்ணினேன். எங்க‌ மாப்புக்காக‌.. பின்ன‌, இத்த‌னை நாளா இது தான் மீன் ஆன‌ம், இது தான் க‌றி ஆனம்னு சொல்லி அவ‌ங்க‌ள‌ ஏமாத்திட்டோமேன்னு தான்.
***

ஊருக்கு போற‌துக்கு ஜாலியா இருந்தாலும் க‌ர்ப்ப‌மா இருக்கும்போது எல்லாரும் ப‌ய‌ப்ப‌டுற‌து அட்வைஸுக்கு தான். நின்டா, ந‌ட‌ந்தா, உட்கார்ந்தா, தூங்கினா, எல்லாத்துக்கும் ஒரு மெத்ட‌லாஜி வெச்சிருப்பாங்க. பல விஷயங்களில் நமக்கு நன்மை இருந்தாலும் ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ள் ந‌ம்ம‌ளால‌ ப‌ண்ண‌வே முடியாது. உதார‌ண‌த்துக்கு தூங்கும்போது திரும்பி ப‌டுக்க‌னும் என்றால் எந்திச்சு உட்கார்ந்து தான் ப‌டுக்க‌னுமாம். இல்ல‌ன்டா புள்ளை குட‌லை சுத்திக்குமாம். இப்ப‌டி யாராச்சும் அட்வைஸ் ப‌ண்ணினா, நான், ஆமாமா, அப்ப‌டித்தான் செய்றேன்னு சொல்லிடுவேன். வேற‌ வ‌ழியில்லையே!
***


என்ன்ன தான் நம்ம மெட்ராஸ், நம்ம சென்னைன்னு வாய்கிழிய சப்போர்ட் பண்ணினாலும், ஒரு விஷயத்துல நம்ம ஊரு பயங்கரமா அடி வாங்கும். அது கூவாருன்னு நீங்க நினைசீங்கன்னா அது தப்பு. அது நம்ம ஊரு ஆட்டோ டிரைவர்கள் தாங்க. சே! ஒரு பக்கம் அநியாய கொள்ளைன்னா, இன்னொரு பக்கம் பொறுப்பில்லாம ஓட்டுறது.  எப்ப ஆட்டோவில ஏறினாலும், வயிதுமேல கைய வெச்சிட்டு, கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க சார்ன்னு சொல்லிட்டே தான் ஏறுவேன். ஆனா கேட்டா தானே? ஒரு தடவை ஸ்பென்சர் சிக்னல் கிட்ட, மெயின் ரோடுல இருந்து அப்படியே சர்வீஸ் லேனுக்கு ஒரு ஆட்டோவை எதிட்டாருன்னா பாத்துக்கோங்க. இப்ப நினைச்சாலும் கடுப்பா இருக்கு. ஆனா பாருங்க, டாக்டர் குறிச்ச பிரசவ நாள் தாண்டியும் புள்ளை வெளிய வர மாற்றுக்குன்னு தெரிஞ்சதும் ஆட்டோவுல இன்னும் நல்லா ரவுண்டு அடிக்கலாம்னு தோணிச்சி.. ஹிஹி..

***

எப்படியோ, நல்லபடியா எங்களுக்கு ஒரு குட்டிபாப்பா வந்துட்டான்.. அல்ஹம்துலில்லாஹ்.. சார் தூங்குற டைம் தான் நம்ம வேலைய பாக்க முடியும்.. அதான் உங்களை எல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேன்!


Saturday, May 15, 2010

முஸ்லிம் பெண்கள் சம்பாத்தியம்!

சகோதரி சந்தனமுல்லை அவர்கள் முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா என்று ஒரு இடுகையெழுதி அதைப்பற்றி என்னுடைய கருத்தையும் (நம்மளையும் மதிச்சு!!) எழுத சொல்லிருந்தாங்க. நானே எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா எப்பவும் போல என்னுடைய சோம்பல் முடக்கிட்டு. இப்ப நல்லவேளை சகோதரி எழுத சொன்னாங்க. அதனால, சுடச்சுட இந்த பதிவு.


**
முதல்ல ஒரு விஷயம். இஸ்லாத்தை போலவும், நபி சல் அவர்களைப்போலவும் அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளான விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைக்குறேன். முஸ்லிம்கள் எது செய்தாலும் அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகவே மீடியாக்கள் சித்தரிக்கின்றன என்பது என்னுடைய கருத்து. அதுவும் பெண்க‌ள் விஷ‌ய‌த்தில் பார‌ப‌ட்ச‌மாக‌வே ந‌ட‌க்குதுன்னு நாம கண் முன்ன பார்க்கிற விஷயம்.

ச‌ரி, விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோம். தாருல் உலூம் என்ற‌ இஸ்லாமிய‌ அமைப்பு, கொஞ்ச‌ நாள் முன்ன‌ 'முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்வ‌து ஹ‌ராம்' அப்ப‌டின்னு ஒரு ஃப‌த்வா சொன்ன‌தாக‌ எங்க‌ பார்த்தாலும் செய்தி ப‌ர‌வி கிட‌ந்த‌து. முஸ்லிம் பெண்கள் ப‌டிப்ப‌தோ, வேலைக்கு செல்வ‌தோ எந்த‌ இட‌த்துல‌யும் ஹ‌ராம் என்று சொல்ல‌ப்ப‌டாத‌போது எப்ப‌டி இப்ப‌டி ஒரு ஃப‌த்வா வ‌ந்துச்சுன்னு ஒரே குழ‌ப்ப‌ம். பிற‌கு பார்த்தா தான் தெரியுது, இதுவும் மீடியாக்க‌ளின் கைங்க‌ரிய‌ம் தான். ச‌மீப‌மாக‌ வ‌ந்த‌ செய்திக‌ளில் அப்ப‌டி ஒரு 'ஃப‌த்வாவை சொல்ல‌வில்லை, பெண்க‌ள் வேலை செய்யுமிட‌த்தில் பேண வேண்டிய‌ ஹிஜாபை ப‌ற்றித்தான் சொல்லிருந்தோம்' என்று ம‌றுப்பு தெரிவிச்சிருக்காங்க‌.


**

ச‌ரி. இப்ப‌ முஸ்லிம் பெண்க‌ள் வேலைக்கு செல்ல‌லாமா? செல்ல‌க்கூடாதா? இஸ்லாம் இதைப்ப‌த்தி என்ன‌ சொல்லுது?


ஒருத்த‌ர் முஸ்லிம் என்று சொன்னால் அவ‌ர் எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னுக்கு முற்றிலும் அடிப‌ணிந்த‌வ‌ராவார். ஆங்கில‌த்துல‌ சொல்ல‌னும்னா 'டோட்ட‌ல் ச‌ப்மிஷ‌ன் டு அல்லாஹ்'. இதில் ந‌ம்ம‌ வாழ்க்கையோட‌ ஒவ்வொரு செய‌ல்க‌ளுமே இறைவ‌ண‌க்க‌ம் தான். காலையில‌ தூங்கி எழுவ‌திலிருந்து, இர‌வு தூங்க‌ செல்லும் வரை பல் துலக்குவதிலிருந்து சாப்பிட்ட பிறகு கை கழுவுவது வரை, வியாபாரம் செய்வதில் இருந்து ஒருத்தர் வீட்டு விருந்துக்கு நாம போன நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் வரை நாம‌ செய்ய‌க்கூடிய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை எப்படி ஒழுங்கோட‌ செய்வ‌துன்னு இஸ்லாத்தில் ந‌ம‌க்கு க‌ட்டளை/அறிவுரை இருக்கு. வெளிய‌ இருந்து பார்க்கும்போது இது ரொம்ப‌ பிற்போக்குத்த‌ன‌மா தெரிய‌லாம். ஆனா 1400 வருஷ‌ங்க‌ளாக‌ இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ச‌ல்) அவ‌ர்க‌ளை பின்ப‌ற்றுவ‌தில் இன்றிருக்கும் கோடிக்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ளுக்கு எந்த‌ சிர‌ம‌மும் இல்லை.


அப்ப‌டி, ஆண்க‌ள், பெண்க‌ள் என‌ சேர்த்தியாக‌வும், த‌னித்த‌னியாக‌வும் ம‌னித‌ர்க‌ளுக்கு ப‌ல‌ க‌ட்டுபாடுக‌ள் இஸ்லாத்தில் இருக்கு.


ஒரு குடும்ப‌ம் என்றால், அதில் தாய்‍,த‌க‌ப்பனுக்கும், பிள்ளைக‌ளுக்கும் ப‌ல‌ கட‌மைக‌ள் இருக்கு. இஸ்லாத்தில் என்ன‌தான் ம‌னைவி ப‌ண‌க்காரியாக‌ இருந்தாலும், ச‌ம்பாதிப்ப‌வ‌ளாக‌ இருந்தாலும், குடும்ப‌த்தின் ப‌ராம‌ரிப்புக்கு ச‌ம்பாதிக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டுமே இருக்கு. ம‌னைவி தான் ச‌ம்பாதிக்கிறாளேன்னு க‌ண‌வ‌ன் ஜாலியா இருக்க‌ முடியாது. அதே போல‌, ம‌னைவி ச‌ம்பாதிப்ப‌தில் அவ‌ள் குடும்ப‌த்திற்கு செல‌வு செய்ய‌ க‌ட‌மை இல்லை.
அதாவ‌து, ஒரு குடும்ப‌த்தில‌ க‌ண‌வ‌ன், ம‌னைவி இருவ‌ரும் ச‌ம்பாதிச்சாலும், ம‌னைவிக்கு குடும்ப‌த்துக்காக‌ செல‌வு செய்ய‌னும்கிற‌ அவ‌சிய‌மே இல்லை. அப்ப‌டிக்க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ க‌ண‌வ‌னுக்கோ, இல்லை அவ‌ள் த‌க‌ப்ப‌னுக்கோ, பிள்ளைக‌ளுக்கோ இன்னும் வேறு யாருக்குமே உரிமை இல்லை.

இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை இருக்கும்போதே நாம‌ தெரிஞ்சுக்க‌லாம், பெண்க‌ள் வேலைக்கு போவ‌தையும், ச‌ம்பாதிப்ப‌தையும் இஸ்லாம் எந்த‌ வித‌த்திலும் த‌டுக்க‌வில்லை. இன்னும் சொல்ல‌ப்போனா இப்ப‌டி ஒரு க‌ட்ட‌ளை தான் எனக்கு க‌ண்டிப்பா ச‌ம்பாதிக்க‌னும்கிற‌ ஆசைய‌ தூண்டிச்சே. பின்ன‌, நாம‌ ச‌ம்பாதிச்ச‌த‌ ந‌ம்ம‌ இஷ்ட‌ப்ப‌டி செல‌வு செய்ய‌லாம்தானே? (ஆனா அதை நேர்வ‌ழியில் செல‌வு செய்வ‌து முக்கிய‌ம். ஏன்னா அதைத்தந்த‌ இறைவ‌னுக்கு நான் ப‌தில் சொல்ல‌னுமில்லையா?)

ச‌ரி, அப்ப‌ ஏன் பெண்க‌ள் வேலைக்கு போற‌த‌ ப‌த்தி எந்த‌ வித‌ க‌ட்டுப்பாடும் இல்லையா? இருக்கு. எப்ப‌டி ஒரு ஆணுக்கு குடும்ப‌த்திற்க்காக‌ ச‌ம்பாதிப்ப‌து க‌டைம‌யோ, அதே போல‌ ஒரு பெண்ணுக்கு குடும்ப‌த்தை பார்த்துக்கொள்வ‌து கட‌மையாகிற‌து. இரண்டையும் சமாளிக்க முடியும்னா தாராளமா வேலைக்கு போகலம்.

உடனே, பெண்கள் என்றால் சமையல் கட்டுதானா, அப்படித்தானா இப்படித்தானா என்று குதிப்போம். நமக்கு சமையல் போர் என்றால், அதே போல எத்தனை ஆண்கள் சம்பாதிச்சு தான் ஆக வேண்டும் என்று பிடிக்காத வேலையைக்கூட குடும்பத்திற்க்காக கஷப்படுறாங்க? துபாய் மாதிரி வளைகுடா நாடுகள்ல வீட்டு சாப்பாடு கூட கிடைக்காம அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் என்று எவ்வள்வு கஷ்டப்படுறாங்க? அதை பார்க்கும்போது வீடும், சமையலும் ஒண்ணுமில்லைன்னு தான் நான் சொல்லுவேன்.



வேலை செய்யும் இட‌த்திலும் க‌ண்டிப்பாக‌ ஹிஜாபை பேண‌ வேண்டும். நான் கேம்ப‌ஸ் இன்ட‌ர்வியூக்க‌ளுக்கு போகும்போது ப‌ல‌ர் என்னிட‌ம் கேட்ட‌து, 'ஹிஜாப் போட‌க்கூடாதுன்னு சொன்னா என்ன‌டீ ப‌ண்ணுவே?' 'அப்ப‌டிப்ப‌ட்ட‌ வேலை என‌க்கு தேவையில்லைன்னு சொல்லுவேன்'. ஏன்னா, வேலைன்னு வ‌ந்துட்டா, ம‌ண்டைக்குள்ள‌ இருக்குற‌து தான் முக்கிய‌மே ஒழிய‌, ஆடைக்குள்ள‌ இருக்குற‌து இல்ல‌.



அடுத்த‌தா, அள‌வுக்க‌திக‌மான‌ சோஷிய‌லைசிங் இருக்க‌க்கூடாது. ஆண்க‌ளிட‌ம் பேசும்போது ந‌ம்முடைய‌ பேச்சு வெறும் வேலையை ப‌ற்றி ம‌ட்டும் இருக்க‌ வேண்டுமே ஒழிய‌ வீண் அர‌ட்டைக‌ளுக்கு நோ. நான் என் அலுவ‌ல‌க‌த்தில் சேர்ந்த புதிதில் அவுட்டிங்க் எல்லாம் என‌க்கு வ‌ர‌ விருப்ப‌மில்லை என்று சொன்னேன். என்னை ம‌தித்தார்க‌ள். :)

அதோட‌ ரொம்ப‌ முக்கிய‌ம், ந‌ம்முடைய‌ க‌டமையான‌ தொழுகையையும் பேண‌ அனும‌திக்க‌னும். இது ஆண்க‌ளுக்கும் பொறுந்தும். நாம் இதை கேட்ப‌து கொஞ்சம் ஓவ‌ர் தான். இருந்தாலும் ச‌மாளிப்ப‌து ந‌ம்முடைய‌ க‌ட‌மை. ஒரு நாளைக்கு எத்த‌னையோ டீ ப்ரேக் எடுக்கும்போது ஐந்து நிமிட‌ங்க‌ள் தொழுவ‌த‌ற்கு எடுப்ப‌து ஒன்றும் பெரிய‌ விஷ‌ய‌மில்லை. இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக இருப்பது நம் கடமை


என்னைப்பொறுத்த வரைக்கும், நான் இஸ்லாத்தின் எல்லைக்குள் என்னால் இயன்ற வரை நான் நினைத்ததை செய்துக்கொண்டு தான் இருக்கிறேன்.



முன்பே சொன்னது போல, ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விஷயத்தில் எந்த சமரசமும் செய்துக்கொள்ள மாட்டார்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் இறைவன் எனக்கிட்ட கட்டளைகளை நான் எந்த விதத்திலும் காசு, பணத்துக்காக விட்டுக்கொடுக்க மாட்டேன். அதனால, என்னுடைய இத்தனை கட்டுபாடுகளையும் புரிந்துக்கொள்ளும் நிறுவனத்தில் சேர பொறுமையாகவே இருந்தேன்.


இப்பல்லாம் காலையில் ஒன்பது மணிக்கு போயி, ஐந்து மணிக்கு வீட்டுக்கு வரும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. ஆனா, நாம நம்ம பாஸிடம் எடுத்து சொன்னால் கண்டிப்பாக புரிந்துக்கொள்வார்கள். வேலை அதிகமா இருந்தா வீட்டுக்கு போய் செய்ய சொல்லுவாங்க. என் விஷ‌த்தில் இது ந‌ட‌ந்திருக்கு.
ஒரு குடும்பம் என்றால் அதில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு, ஒருத்தர் கடமைய இன்னொருத்தர் செய்ய உதவனும். இதற்கு அழகிய உதாரணம் இறைத்தூதர் முஹம்மது நபி சல் அவர்களுடைய மனைவிமார்களிடம் வீட்டு வேலைகளில் எவ்வளவு உதவியாக இருந்தார்கள் என்பது. வேலை செய்யலன்னா கூட வீட்டு வேலைகளில் உதவி செய்யும்போது வேலை செய்யும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஒரு நல்ல கணவனின் அடையாளம்.

வேலை செய்வது மட்டுமில்லாம சொத்துரிமை (குடும்பத்திற்காக செலவு செய்யும் கட்டாயம்/கடமை இல்லைன்னா கூட நமக்கெல்லாம் சொத்தில் பாதி பங்கு இருக்குங்கோவ்!), திருமணம், விவாகரத்து, இன்னும் பல விஷயங்களில் பெண்களுக்கு எத்தனையோ உரிமைகளும் சலுகைகளும் இஸ்லாத்தில் இருக்கு. இஸ்லாத்தை சரியா புரிந்துக்கொள்ளாதவர்களும், ஒழுங்கா கடைப்பிடிக்காதவர்களும் இஸ்லாத்தின் பேரால் செய்யும் தவறுகளுக்காக மீடியாக்களுக்கு தீனியாகின்றனர் என்பது தான் வருத்தம்.

Tuesday, May 4, 2010

அகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி

...அப்படி எதுவும் ஆரம்பிக்கலைங்க.. சும்மாத்தான் எல்லாரும் சந்திச்சோமே. சகோதரி ஸாதிகாவின் அமீரக விஜயத்தை ஒட்டி (பில்ட் அப் எப்பூடி) ஏற்பாடு செஞ்ச சந்திப்பு. எல்லாரும் சந்திப்போமான்னு ஹூசைனம்மா கேட்டவுடனேயே எனக்கு ஒரே சந்தோஷமா இருந்தது. எப்படியும் எல்லாரையும் பார்த்துடனும்னு எங்க மாப்பியை நச்சரிச்சு, ரெடியாகி கிளம்பி போனோம்.


நிறைய பேர் பதிவுகள்ல பார்த்துருக்கேன். வலையுலகம் மூலமா கிடைக்கும் நல்ல விஷயம்னு சொல்ல சொன்னால், எல்லாரும் ஒட்டுமொத்தமா சொல்வது இங்கு கிடைக்கும் நல்ல நட்புக்களைத்தான்! நானும் ஆச்சரியப்படுவேன், அதெப்படி முகம் தெரியாத ஒருத்தவங்களோட சட்டுன்னு பழக முடியும்னு. ஆனா முத‌ல் ச‌ந்திப்பிலேயே நீண்ட‌ நாள் ப‌ழ‌கின‌ தோழிக‌ள் போல‌ எல்லாரும் க‌ல‌க‌ல‌வென்று இருந்த‌து என‌க்கு இன்னும் ம‌லைப்பா இருக்கு.


வீட்டை விட்டு கிளம்பும்போதே நல்லா பசி.. இன்னைக்கு வெளிய சாப்பிடலாம்னு நைசா மாப்புக்கிட்ட அடி போட்டுட்டு எஸ்கேப். நானும் நினைச்சேன், என்ன ஒரு அரை மணி நேரம்தான் எல்லாரும் பார்த்துக்குவோம்னு. லுலுவில் ஹூசைனம்மாவை பார்த்தவுடன், அவங்களா இவங்கன்னு ஒரே ஆச்சரியம். அவ்வளவு சாதுவா இருந்தாங்கப்பா! ஜலீலாக்காவும் வந்த பிறகு பேசிட்டு அப்படியே பார்க்குக்கு நடை போட்டோம்.. உள்ள காலத்தான் எடுத்து வைக்கிறேன், ஸாதிகாக்கா 'ஆ பிரியாணி சட்டி'ன்னு ஜோரா ஒரு வரவேற்பு குடுத்தாங்க. அப்படியே மலீக்காக்கா எல்லாரையும் அறிமுகப்படுத்த, மலீக்காக்காவை பார்த்து நீங்க யாருன்னு கேக்க, ஹிஹி.. ஆஸியாக்காவோட சமையல் பக்கம் போயி நான் முதல் நாள் செஞ்ச சுருட்டு கறி எங்க மாப்பிக்கு ரொம்ப பிடிச்சிட்டு..

ஜ‌லீலாக்கா கொண்டுட்டு வ‌ந்த‌ சூப்ப‌ர் ம‌சால் வ‌டைய‌ முத‌ல்ல‌ போணி ப‌ண்ணின‌து நானே! ம‌லீக்காகா டூடுல்ஸ் (கோதுமை தோசைக்குள்ள‌ நூடுல்ஸ் ஸ்ட‌ஃபிங்க்‍: பேரு வெச்சிட்டோம்ல‌) சூப்ப‌ரா இருந்துச்சு.. ந‌ல்ல‌ ப‌சி வேற‌, செம்மையா சாப்பிட்டேன்! ஹிஹி...

ச‌கோத‌ரிக‌ள் ஸாதிகா, ஹூசைன‌ம்மா, ஜ‌லீலா, ம‌லீக்கா, ம‌ல‌ர், ஆஸியா இவ‌ங்க‌ளையெல்லாம் முத‌ல்ல‌யே தெரிஞ்சாலும், ச‌ந்திப்பின் மூல‌மா அறிமுக‌மான‌ ச‌கோத‌ரிக‌ள் ம‌னோ ம‌ற்றும் அந‌ன்யாவை ச‌ந்திச்ச‌தில் ரொம்ப‌ சந்தோஷ‌ம். ச‌கோத‌ரி ம‌னோ அவ‌ங்க‌கிட்ட‌ ச‌ரியா பேச‌ முடிய‌ல‌. ஆனா ஜ‌லீலாக்கா சொன்னாங்க‌, அவ‌ங்க‌ ரொம்ப‌ அருமையா எழுதுவாங்க‌ன்னு. பிற‌கு தான் போயி பார்த்தேன்! அந‌ன்யாவின் கொஞ்சும் த‌மிழ் ரொம்ப‌வே ந‌ல்லா இருந்த‌து.. மலீக்காவின் மகன் மஃரூஃப் அப்படியே அம்மா சாடை.. ஜலீலாக்கவின் மகன் ஹனீஃபும் அப்படியே. மாஷா அல்லாஹ்.. பொறுமையான பிள்ளைகள். நேரம் ஆனதும் மாப்பு பார்க்குக்கு வந்துட்டாங்க, அப்படியே கிளம்புறேன்னு சொன்னதும், ஜலீலாக்கா எனக்குன்னு தனியா எடுத்து வெச்ச முர்தபாவும் மலீக்காகாவோட அன்பு பரிசாக எனக்கே பிடிச்ச பிங்க் கலர் பர்ஸும் தந்து அசத்திட்டாங்க.

நான் வீட்ட‌ பொறுத்த‌ வ‌ரைக்கும் பெரிய‌ சோம்பேறி. ம்மா வீட்டுல‌ இருந்தா ஒரு வேலையும் செய்ய‌ மாட்டேன், அதுவும் கிச்ச‌ன் ப‌க்க‌மெல்லாம் ந‌ல்ல வாச‌னை வ‌ரும்போது எல்லாருக்கும் முன்னாடியே ம்மா செஞ்ச‌தை ஆட்டைய‌ போட‌த்தான் போகுற‌து. அப்ப‌டி இருக்கும்போது க‌ல்யாண‌ம் ஆகி இங்க தனியா வந்த‌ பிற‌கு எப்ப‌டித்தான் ச‌மாளிக்க‌ப்போறேனோன்ற‌ கவ‌லை இருந்த‌து.

இங்க‌ வ‌ந்து பார்த்தா தான் தெரியுது, வேலைக்கும் போயிட்டு, பிள்ளைக‌ளையும் பார்த்துட்டு, அட்ட‌காச‌மா ச‌மைய‌லும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போக‌லைன்டாலும் க‌விதைக‌ள், அருமையான‌ க‌ட்டுரைக‌ள், யோசிக்க‌ வைக்கும் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை த‌ங்க‌ள் அனுப‌வ‌ம் மூல‌ம் ப‌கிர்ந்துட்டு இருக்கும் எல்லாரையும் பார்த்த‌ப்போ என‌க்கு அவ‌ங்க‌ல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷ‌னாக‌வே தெரிஞ்சாங்க‌. உண்மையா.

அங்க‌ ச‌ந்திச்ச‌வ‌ங்க‌ள்ல‌ நான்தான் இளைய‌வ‌. இன்னும் பெருசா பொறுப்புக‌ள் எதுவும் வ‌ர‌லை. சாத‌ர‌ண‌மா செய்ய‌க்கூடிய‌ விஷ‌ய‌ங்க‌ளையே செய்ய‌ ச‌டையும் ஆளு நான். ஆனா இவ‌ங்க‌ல்லாம் நான் ம‌லை போல‌ நினைக்கும் ப‌ல‌ வேலைக‌ளை சாத‌ர‌ண‌மாக‌ செய்ய‌க்கூடிய‌வ‌ங்க‌. எல்லாரும் நினைப்ப‌து போல‌ ஒரு பெண் ச‌மைய‌ல் செய்வ‌தும், பிள்ளைக‌ளைக‌ளையும், க‌ண‌வ‌ரையும், அவ‌ர் குடும்ப‌த்தையும், த‌ன் குடும்ப‌த்தையும் பார்த்துக்கொள்வ‌து சாத‌ர‌ண‌ விஷ‌ய‌ம் கிடையாது.


பெண்க‌ள் நாங்க‌ல்லாம் சேர்ந்து ச‌ந்திச்ச‌தில் எல்லாருக்கும் ச‌ந்தோஷ‌ம்னா, என‌க்கு அதுக்கூட‌வே ந‌ல்ல‌ ப‌டிப்பினையும். ஒவ்வொருத்த‌வ‌ங்க‌கிட்ட‌ இருந்தும் க‌த்துக்க‌ நிறைய‌ விஷ‌ய‌ம் இருக்கு. உங்க‌ எல்லாரையும் மீண்டும் ச‌ந்திக்க‌ ஆவ‌லா இருக்கேன், இன்ஷா அல்லாஹ்!

Tuesday, April 13, 2010

ஈமான் என்னும் இறைநம்பிக்கை!

அட, தொடர்ந்து மூணாவது பதிவும் தீபா அவர்களின் அழைப்பால்!! ஹிஹி..


***

கொஞ்சம் சீரியஸாக, என்னுடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பத்தி எழுதனும்.. நான் பதினாலு வருஷமும் படிச்சது முஸ்லிம்களால் நடத்தப்படும் பெண்கள் பள்ளியில், என் பிறந்த வீடும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் தான்.. ஆனா எங்க வீட்டுல மட்டும் ஒரு ஸ்பெஷல்.. கீழ் விட்டில் வட இந்தியர்களும், முதல் மாடியில் கேரளத்தை சேர்ந்தவங்களும் இருந்தாங்க.. மார்வாடிகளோட அதிகம் பழக்கமில்லைன்டாலும் கேரளாக்காரங்களோட எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது.. அந்த அங்கிளும் ஆன்ட்டியும் எங்கும்மா மேல உயிரா இருப்பாங்க.. ஆனா என் வயசில யாருமே இல்லை.. அதனால விளையாட்டெல்லாம் தம்பி, மாமி, சாச்சாமார் மக்களோடத்தான்..


ப‌ள்ளியில‌யும் இர‌ண்டு, மூன்று மாண‌விக‌ளைத்த‌விற‌ மாற்று ம‌தத்தை சேர்ந்த‌வ‌ங்க‌ கிடையாது.. இப்ப‌டி இருந்த‌ என‌க்கு எங்க‌ க‌ம்மா (பாட்டி) வீடு ஒரு த‌னி உல‌க‌ம்.. அவ‌ங்க‌ அப்போ பொன்னேரியில‌ இருந்தாங்க‌.. அங்க‌ ஒரு கால‌னி மாதிரி இட‌ம்... அங்க‌ நாங்க‌ ம‌ட்டும்தான் முஸ்லிம்.. இதுல‌ காமெடி என்ன‌ன்னா, என் பேரே பாதி பேரு வாய்ல‌ நுழையாது.. என்னை சின்ன‌ வ‌ய‌சிலேயே பாய‌ம்மான்னு கூப்டு கிண்ட‌ல் பண்ணுவாங்க‌.. ஹிஹி..


அங்க‌ ஒரு பாம்பு புத்து இருந்த‌து.. அதை சுத்தி சுவ‌ர் எழுப்பி அதை ஒரு வ‌ழிபாட்டு த‌ல‌ம் மாதிரி க‌ட்டியிருந்தாங்க.. நாங்க‌ வாண்டுக‌ள்லாம் அங்க‌ தான் போயி விளையாடுவோமே.. முக்கிய‌மா சொப்பு சாமான் விளையாட‌ ஏத்த‌ இட‌ம் அது தான்.. ஒரு போதும் எங்க‌ க‌ம்மாவோ, எங்கும்மாவோ அங்க‌ல்லாம் போக‌க்கூடாதுன்னு என்னை த‌டுத்த‌தும் இல்ல‌, என்னை அங்க‌ சேர்த்துக்க‌ கூடாதுன்னு ம‌த்த‌வ‌ங்க‌ யாரும் சொன்ன‌தும் இல்லை.. என்ன‌, அவ‌ங்க‌ அந்த‌ புத்தை கும்பிடுவாங்க‌, நாம‌ அதை செய்ய‌க்கூடாதுங்குற‌து ம‌ட்டும் என‌க்கு தெரிஞ்சிது.

அதே கால‌னியில‌ தான் முத‌ன் முத‌ல்ல‌ என‌க்கு கிறிஸ்த‌வ‌ர்க‌ள் அறிமுக‌மும் கிடைச்ச‌து.. அங்க‌ கிறிஸ்தும‌ஸ் அப்போ ம‌ர‌த்தை அழகா அல‌ங்க‌ரிச்சுருப்பாங்க‌..எங்க‌ வ‌ய‌சு பிள்ளைங்க‌ யாரும் அங்க‌ இல்ல‌ன்டா கூட சும்மாவாச்சும் நாங்க‌ல்லாம் அவ‌ங்க‌ வீட்டுக்கு போவோம்..
இப்ப‌டித்தான் மாற்று ம‌த‌த்த‌வ‌ர்க‌ளைப் ப‌த்தின‌ விவ‌ர‌ம் என‌க்கு சின்ன‌ வ‌ய‌சில‌ தெரிஞ்ச‌து... எங்க‌ வீட்ட‌ பொறுத்த‌வ‌ரைக்கும் முஸ்லிம்க‌ள்னா ஆண்க‌ள் தொப்பி போடுவாங்க‌, பெண்கள் த‌லையில‌யும் சீலை போடுவாங்க‌, பெருநாள் கொண்டாடுவோம் (அப்ப‌மும் என்ன‌, பெருநா காசும் பிரியாணியும் தான்), க‌ல்யாண‌ம் இல்ல‌ க‌டை திற‌க்க‌னும்னா ஃபாத்தியா ஓதுவாங்க‌.. அவ்வ‌ள்வு தான்..

எங்க‌ க‌ம்மா (அம்மாவின் அம்மா) வீட்டுல‌ தொழுகை எல்லாம் பார்க்க‌ முடியும்.. ஆனா அவ‌ங்க‌ளும் ச‌ரியான‌ த‌ர்கா பார்ட்டி.. அதாவ‌து ஒரு ம‌னித‌ரின் அட‌க்கஸ்த‌ல‌த்துக்கு ப‌ச்சை போர்வை போட்டு அங்க‌ ஒரு தாத்தா ம‌யிலிற‌குல‌ செஞ்ச‌ துடைப்ப‌த்தால‌ ந‌ம்ம‌ முக‌த்த பெருக்கி விடுவாரு.. அதுக்கு பேரு தான் த‌ர்கா.. வெள்ளிக்கிழ‌மையானா த‌வ‌றாம‌ எங்க‌ க‌ம்மா என்னை அங்க‌ கூட்டிட்டு போயிடுவாங்க‌.. நானும் அங்க‌ இருக்குற‌ குட்டி குட்டி த‌வ‌ளைங்க‌ள‌ பாக்க‌ ஆசையா போவேன்.. (கூட‌வே பூந்திக்காக‌வும்.. ஹிஹி).. ஆனா இதெல்லாம் தவறுங்கறது கொஞ்ச லேட்டாதான் தெரிஞ்சது..

அந்த‌ வ‌ய‌ச‌ பொறுத்த‌ வ‌ரைக்கும் நாம‌ அல்லாஹ் ஒருவ‌னைத்தான் வ‌ண‌ங்க‌ வேண்டும் என்ப‌து எப்ப‌டியோ ஓர‌ள‌வுக்கு எங்க‌ ப‌ள்ளியில‌ சொல்லிக்கொடுத்த‌ வ‌ரைக்கும் தெரியும்... அது போல மாற்று மத நண்பர்கள் "உங்க அல்லாஹ் எப்படி இருப்பாரு"ன்னு கேட்டா "அல்லாஹ்வை நாம பாக்க முடியாது, ஒரு நபி (மூஸா/மோசஸ்) அல்லாஹ்வை பாக்கனும்னு கேட்டப்போ அல்லாஹ்வோடைய ஒளி மட்டும் பட்டு ஒரு மலையே தூள் தூள் ஆயிடுச்சாம்" ங்கற அளவுக்கு தான் தெரியும்..


நான் ஆறாவ‌து ப‌டிக்கும்போது எக்ஸ்க‌ர்ஷ‌னுக்கு போக‌னும், திங்க‌ எதாச்சும் வாங்கி குடுங்க‌ வாப்பான்னு கேட்ட‌ப்போ என்னை வெளிய‌ கூட்டிட்டு போனாங்க‌.. போகும்போது வாப்பா, "நாம யார‌ வ‌ண‌ங்க‌னும்?" அப்ப‌டின்னு கேட்டாங்க‌.. நானும் "அல்லாஹ்வைத்தான் வ‌ண‌ங்க‌னும்"னு சொன்னேன்.. "அப்போ, அந்த‌ த‌ர்காவில‌ யாரோ ஒரு ம‌னித‌ரைத்தானே அட‌க்க‌ம் செஞ்சிருக்கு, அப்ப‌ ஏன் அதுகிட்ட‌ போயி என‌க்கு அது செய், இது செய்னு கேக்குறீங்க‌"ன்னு வாப்பா கேட்ட‌தும் தான் நான் யோச‌னை ப‌ண்ணினேன்..

அதே கேள்விய‌ எங்க‌ க‌ம்மாகிட்ட‌ கேட்ட‌ப்போ அவ‌ங்க‌ என‌க்கு ச‌ரியா ப‌தில் சொல்லலை.. எப்ப‌டியோ இறைவ‌ன் அருளால் இஸ்லாமிய‌ க‌ல்வி மூல‌மா இஸ்லாத்தில் இடைத்த‌ர‌க‌ர்க‌ள் கிடைய‌வே கிடையாது, இறைவ‌னுக்கு இணை வைத்த‌ல் மிக‌ப்பெரிய‌ பாவ‌ம்னு விள‌ங்கிய‌து...

குரானை அர‌பியில சரியான உச்சரிப்போட‌ ஓத‌வும், ஓர‌ள‌வுக்கு இஸ்லாத்தை ப‌த்தியும் தெரிஞ்சுக்க‌ என் ப‌ள்ளி மிக‌வும் உத‌விய‌து... அது போல‌ ப‌ள்ளி இறுதி நாட்க‌ள்ல‌ நானே குரானை த‌மிழாக்க‌த்தோடு ப‌டிக்க‌த்தொட‌ங்கினேன்.. அப்ப‌த்தான் தெரிஞ்ச‌து, எவ்வ‌ள‌வு பெரிய‌ அற்புத‌த்தை ந‌ம்ம‌ கையில‌ வெச்சிருக்கொம்னு..

க‌ல்லூரிக்கு போன‌தும்தான் "ஆமா, நீ ஏன் இந்த‌ முக்காடு போடுற‌"ன்னு ஒவ்வொருத்த‌ரா கேக்க‌ ஆர‌ம்பிச்சாங்க‌.. ஒரு சில‌ர் ஒரு மாதிரி இர‌க்க‌த்தோடும் ஒரு சில‌ர் கிண்ட‌லாக‌வும் கேப்பாங்க‌..

என்னுடைய‌ இறைந‌ம்பிக்கையும், இஸ்லாத்தை ப‌த்தின‌ அறிவும் வ‌ள‌ர‌ ஆர‌ம்பிச்ச‌து இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பிச்ச பிறகு தான்.. மேலாண்மை படிக்கும்போது அங்குள்ள‌ விடுதி மெஸ்ல‌ போடுற‌ கோழிக்க‌றி ஹ‌லால் கிடையாது, அதனால‌ அங்க‌ நான் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வெஜிடேரிய‌ன்.. ந‌ண்ப‌ர்க‌ளெல்லாம் ஏன்னு கேக்குற‌ப்போ, ஹ‌லால்னா என்னன்னு விளக்குவேன்.. அதே மாதிரி ஏதாச்சும் நல்ல உடை போட்டுட்டு, வெளிய கிளம்பும்போது நான் துப்பட்டாவைக்கொண்டு முழுசா மறைச்சதும் 'ஏன்டி, இவ்வளவு நல்ல ட்ரெஸ் போட்டுட்டு இப்படி மறைக்கிற'ன்னு கேப்பாங்க.. நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிறது எனக்காக தான்டி, ரோட்ல போறவங்களுக்காக இல்லன்னு ஒவ்வொரு தடவையும் விளக்கனும்.. ஹிஹி...



அதே போல நான் நிதி நிர்வாகவியல்ல (அதாம்பா ஃபைனான்ஸ்) சேர்ந்ததும் வட்டி என்பது இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவங்களில் ஒன்று, அதற்கு மாற்றாக இஸ்லாமிய வங்கிமுறை பத்தி மத்தவங்களுக்கு விளக்க அதை பத்தி படிச்சேன்.. 'அதெப்படி வட்டி இல்லாம வியாபாரம் சாத்தியம்'ன்னு கேக்குறவங்களுக்கு விளக்கவே இன்னும் நிறைய இஸ்லாத்தை பத்தி தெரிஞ்சிகிட்டேன்...

இப்ப‌டி நேர‌டியா கேள்வி கேட்ட‌வ‌ங்க‌ ஒரு ப‌க்க‌ம்னா, வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் இஸ்லாத்தை ப‌த்திய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ப‌டிச்சு அதை தெளிவு ப‌டுத்திக்க‌ நான் இஸ்லாத்தை இன்னும் அதிக‌மா க‌த்துக்கிட்டேன்..


இப்ப‌டி இறைந‌ம்பிக்கை என்ப‌து இறைவ‌ன் ஒருவ‌னேங்குற‌ கோட்பாடுல‌ தொட‌ங்கி, நாம் வாழும் வ‌ழிமுறைக‌ள் இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி ச‌ல் அவ‌ர்க‌ள் வாழ்ந்த்த‌ அடிப்ப‌டையில் என்ப‌து வ‌ரைக்கும் என்னுடைய‌ ந‌ம்பிக்கை ஆழ‌மா வ‌ள‌ர்ந்துட்டே இருக்கு.. பொறுமையும், மன்னிக்கும் மனமும் நம் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்கிடும்கிறது குரானை படிச்சா விளங்கும்.. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா என்னதான் மனிதன் எப்பேர்ப்பட்ட சாதனைகளை செய்திருந்தாலும் ஒரு அளவுக்கு மேல சில விஷங்கள் நம்ம கையில் இல்லை.. இதை உணர்ந்தவங்க பொறுமையோட இருப்பாங்க, உணராதவங்க நிம்மதியை தொலைச்சிடுவாங்க..

ப‌டிக்கும் கால‌ங்க‌ளில் விளையாட்டுப்போக்கா இருந்தாலும், இறைந‌ம்பிக்கை என‌க்கு என்றும் உறுதியாக‌ இருந்திருக்கு, இறைவ‌னின் அருளால்.. ஈமான் என்னும் இறைந‌ம்பிக்கை என‌க்கு வாழ்க்கைய‌ ரொம்ப‌ எளிதா ஓட்ட்க்க‌த்துக்கொடுத்திருக்கு..


அல்ஹ‌ம்துலில்லாஹ்! எல்லா புக‌ழும் இறைவ‌னுக்கே!!


****

Thursday, March 4, 2010

பதின்ம கால கொசுவர்த்தி!

*ரொம்ப‌ பெரிய‌ கொசுவ‌ர்த்தியா இருக்கேன்னு ஓடிடாதீங்க‌*

மறுபடியும் தீபா அவர்களின் அழைப்பின் பேரில் ஒரு பதிவு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு,.


எங்க பள்ளியில உள்ள விடுதியில சில வெளிநாட்டு பிள்ளங்க படிச்சாங்க. முக்கியமா தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, என்.ஆர்.ஐ பசங்கன்னு ஒரு ரேஞ்சா இருக்கும். தாய்லாந்து புள்ளங்கல்லாம் ரொம்ப கோவக்கார புள்ளைங்களாவும் இருப்பாங்க. நாங்க‌ல்லாம் கொஞ்ச‌ம் த‌ள்ளியே இருப்போம்.. அதுல‌ ஒருத்தி தான் நூர்ஜ‌ஹான் (அது அவ‌ளோட‌ இஸ்லாமிய‌ பேர்.. தாய்லாந்து பேர் ம‌ன‌ஸ‌க்குல் சிரிலெர்ட்)..எப்ப‌டியோ நானும், ந‌ஸ் ரீன்னு இன்னொரு தோழியும் நூர்ஜ‌ஹானும் நெருங்கிய‌ தோழிக‌ளாயிட்டோம்..
நான் ப‌தின்ம‌ வ‌ய‌தில் அடியெடுத்து வைத்த‌ ப‌திமூணாவ‌து பிற‌ந்த‌ நாளை ம‌ற‌க்க‌வே முடியாது.. ஏன்னா நூர் என‌க்கு குடுத்த‌ வாழ்த்து அட்டை. அது அவ‌ளே த‌ன் கையால‌ செஞ்ச‌து. ஒரு க‌ருப்பு சார்ட் பேப்ப‌ரையும், வெள்ளை தாளையும் ஜிகினா பேனாவும், ஒரு சின்ன‌ நூலைக்கொண்டும் ரொம்ப‌ அழ‌கா செஞ்சிருப்பா.. அது வ‌ரைக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் இல்லாத‌ என‌க்கு, அந்த‌ அட்டைய‌ பார்த்தும் இவ‌தான் என் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு நான் அடைஞ்ச‌ ச‌ந்தோஷ‌த்துக்கு அள‌வே இல்லை..இப்ப‌ நினைச்சாலும் இனிமையா இருக்கு.. அந்த‌ அட்டையும் ப‌த்திர‌மா இருக்கு.. :)

அப்ப‌ எங்க‌ ப‌ள்ளியில‌ புதுசா ஃப‌வுன்ட‌ன் பெப்சி வெச்சிருந்தாங்க‌. சின்ன‌ க‌ப் அஞ்சு ரூபா, பெருசு ப‌த்து ரூபா.. ந‌ம்ம‌கிட்ட‌ல்லாம் ஏது அவ்வ‌ள‌வு காசு.. ஆனா பெப்சிய‌ பார்த்தாலே வாய் ஊரும்.. நாங்க‌ல்லாம் ஒண்ணா சேர்ந்து காசு போட்டு ஒரு பெப்சிய‌ வாங்கி மாத்தி மாத்தி குடிப்போம். அதுக்கே எப்ப‌டா ப்ரேக் வ‌ரும்னு காத்துகிட்டு இருப்போம். பெப்சி மோக‌ம் போல‌வே அந்த‌ வ‌ய‌சில‌ ஆங்கில‌ப்பாட‌ல்க‌ள் கேக்குற‌து ரொம்ப‌ 'கூலா'னா விஷ‌ய‌மா இருந்துச்சு.. அப்ப வ‌ந்த‌ பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், அக்வாவின் பார்பி கேர்ள் பாட்டெல்லாம் ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணி முணுமுணுக்குற‌து பெரிய‌ விஷ‌ய‌ம்.. ந‌மெக்கெங்க‌ அந்த‌ அமெரிக்க‌ன் இங்கிலீஷ் புரிய‌ப்போகுது.. நூர்ஜ‌ஹான் தான் கேச‌ட் க‌வ‌ர்ல‌ இருந்து பாட்டோட‌ வ‌ரிக‌ள் எல்லாம் சொல்லித்த‌ருவா..

அதுக்க‌ப்புற‌ம் பத்தாவ‌துன்னு ப‌டிப்புல‌ கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருக்க‌னும்னு அப்ப‌டி, இப்ப‌டின்னு போயிட்டு..ப‌தினோராம் வ‌குப்பில‌ என் தோழிக‌ள் அறிவிய‌ல் பிரிவுல‌ சேர, வ‌ணிக‌விய‌ல்ல‌ சேர்ந்தேன். அப்போ விடுதியில தங்கும் இன்னும் ரெண்டு பேர்‍: ஃபரா, ஃபரீனா எனக்கு நெருக்கமானாங்க.

தோழிக‌ள் நாங்க‌ இடைவேளைய‌ப்போ ஒண்ணா சேர்ந்துக்குவோம். ஒரு ப‌த்து நிமிஷ‌ம் கேப் கிடைச்சாலும் நாங்க‌ அடிக்கிற‌ லூட்டிக்கு அள‌வே இருக்காது. ப‌ல‌ அட்வென்ச‌ர்க‌ளை நிக‌ழ்த்திய‌தும் அப்ப‌தான். வீட்டுல‌ இருந்து வ‌ர்ற‌ டே ஸ்கால‌ர்க‌ள் எல்லாம் விடுதிக்குள்ள‌ போக‌ கூடாது. ஆனா நாங்க‌ ஸ்போர்ட்ஸ் ப்ராக்டீஸ் ந‌ட‌க்கும் சம‌ய‌த்துல‌ நைசா போயி தோழிமாரோட‌ ஒண்ணா அர‌ட்டை அடிக்க‌ ஆர‌ம்பிச்சுடுவோம்.. அப்ப‌ திடீர்னு வார்ட‌ன் வ‌ர‌வும் நாங்க‌ல்லாம் ப‌ய‌ந்துட்டு க‌ட்டிலுக்க‌டியில‌ ஒளிஞ்ச‌தெல்லாம் நினைச்சா சிரிப்பா வ‌ருது..

அப்புற‌ம் மூணாரு, ம‌று வ‌ருஷ‌ம் ஊட்டி, பொள்ளாச்சின்னு ரொம்ப‌ இனிமையா க‌ழிஞ்ச‌து ப‌ள்ளி நாட்க‌ள்..ப‌ன்னிரெண்டாம் வ‌குப்பு முடியும்போது எங்க‌ கேண்டீன் ஸ்பெஷலான‌ சிக்க‌ன் பிரியாணி மூணு வாங்கி, ஒரு நேர‌த்துல‌ ஒண்ண‌ ம‌ட்டும் திற‌ந்து நான், நூர், நஸ் பேரும‌ ஒண்ணா சாப்பிட்டோம்..இனி இவ‌ங்க‌ள‌ எல்லாம் எப்ப‌ பார்க்க‌ போறோம்னு ரொம்ப‌ க‌ஷ்ட‌த்தோட‌வே பிரிஞ்சு போனோம்..

ந‌ஸ் ரீன் வ‌ண்ட‌லூரில‌, நூர் ஊட்டி, ஃப‌ரா சிங்க‌ப்பூர், ஃப‌ரீனா நாக‌ர்கோயில், நான் அதே ஊருலயும் இப்ப‌டி ஆளுக்கு ஒரு ப‌க்க‌மா போயிட்டோம்.

பள்ளி நாட்கள்ல பேச்சுப்போட்டி, நாடகம்னு சுத்திட்டு இருந்த நான் கல்லூரியில முதன்முதலா வீதி நாடகங்கள் மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு.. முதல் வருஷம் போபால் கேஸ் ட்ராஜடி பத்தி தலைப்பு.. நாங்க பயங்கரமா சொதப்பினாலும் மத்த டிபார்ட்மென்ட்ல உள்ளவங்க பண்றதை பாத்து அசந்து போயிட்டேன்.. அதுவும் அந்த தலைப்ப பத்தி இன்னும் படிக்க தோணிச்சு, அமெரிக்க ஆதிக்கம் மேல முதன்முதல்ல கோவம் வர ஆரம்பிச்சுது.
பிறகு ஈராக் போர். இனி அமெரிக்க பொருட்களையே பாவிக்க கூடாதுன்னு முடிவெடுத்து ரொம்ப முனைப்பா இருந்தேன்.. முக்கியமா பெப்சி, கோக்.. முற்றிலுமாக முடியலன்னாலும் முடிஞ்ச அளவு கடைப்பிடிச்சேன்.. மறு வருஷம் வீதி நாடக போட்டிக்கு தலைப்பே அப்ப பரபரப்பா இருந்த பெப்சி, கோக் பூச்சிக்கொல்லி மருந்து மேட்டர் தான்.. கிடைச்சுதுடா அல்வான்னு, நானே ஸ்க்ரிப்ட் எழுதி, முதல் வருஷம் சேர்ந்த பொண்ணோட உதவியோட அசத்தலா ஒரு நாடகம் போட்டோம்.. கிடைச்சது முதல் பரிசு.. ஏற்கெனவே பள்ளியில நாடகம் எழுதின அனுபவம் இருந்தாலும் எங்க கல்லூரியில போட்டிங்கறது சாதரணம் கிடையாது.. ரொம்ப ச‌ந்தோஷ‌மா இருந்த‌ த‌ருண‌ங்க‌ள் அது..

ம‌று வ‌ருஷ‌ம் வீதி நாட‌க‌ங்க‌ளை ப்ர‌ஃப‌ஷ‌ன‌லா செய்ற‌வ‌ங்க‌ளோட‌ ப‌யிற்ச்சி எடுத்துட்டு மீண்டும் முத‌ல் ப‌ரிசு வாங்கினோம்.. எங்க‌ டீம் ரொம்ப‌வும் பிர‌ப‌ல‌ம‌டைய‌, சென்னையில் உள்ள‌ ப‌ல‌ க‌ல்லூரிக‌ள்ல‌ நாங்க‌ போட்டிக‌ள்ல‌ க‌ல‌ந்துட்டு முத‌ல் ப‌ரிசுக‌ளா வாங்கி குவிச்சோம்.. அதுல‌ முக்கிய‌மான‌து, ஐஐடி சென்னையில‌ ந‌ட‌ந்த்த‌ 'சார‌ங்' அப்போ.. சமூகத்துல நடக்குற அவலங்கள்னு பல விஷயங்கள கலவையா சொன்னோம்.. கிட்ட‌த்த‌ட்ட‌ க‌ல்லும் முள்ளுமா இருந்த‌ த‌ரையில‌ போட்டிய‌ வெச்சாங்க‌.. ப‌தினைந்து நிமிட‌ங்க‌ள் என்ன‌ ந‌ட‌ந்ததுன்னே தெரியாம‌ நாட‌க‌த்தை முடிச்சோம்.. கைத்த‌ட்ட‌ல்க‌ள்ல‌, கால் வ‌லி தெரிய‌ல‌..போட்டிக்கு ந‌டுவ‌ரா வ‌ந்த‌வ‌ர் வீதி நாட‌கங்க‌ளுக்கு குருவான‌ முத்துசாமி ஐயா.. கொஞ்சம் கூட‌ எதிர்ப்பார்க்காத‌ முத‌ல் ப‌ரிசு.. அந்த‌ வெற்றிய‌ நினைச்சா எதையோ பெரிசா சாதிச்ச‌ திருப்தி இன்னும் இருக்கு..
ச‌த்ய‌ம், ஸ்பென்ச‌ர்னு சுத்தினாலும் எங்க‌ க‌வ‌ன‌மெல்லாம் போட்டிக‌ள்ல‌ தான் அதிக‌மா இருந்த‌தை நினைச்சா ஆச்ச‌ரியமா இருக்கு.. சினிமாவுல‌ வ‌ர்ற‌ மாதிரி எங்க‌ டிபார்ட்மென்ட்டுக்கும் பிகாம் டிபார்ட்மென்டுக்கும் ஆக‌வே ஆகாது.. இதுல‌ ப‌ல‌ வ‌ருஷ‌ங்க‌ளா அவ‌ங்க‌ வாங்கிட்டு இருந்த க‌ல்ச்சுர‌ல் ஷீல்டை நான் செக்ர‌ட‌ரியா இருக்கும்போது எங்க‌ டிபார்ட்மென்ட் வாங்கின‌துல‌ செம்ம‌ க‌டுப்பா இருந்தாங்க‌..எப்ப‌ பார்த்தாலும் ஒரு கோல்ட் வார் இருந்துட்டே இருக்கும்.. :))

எப்ப‌டியோ க‌ல்லூரி ப‌டிப்பு முடிஞ்சுது, ந‌ம‌க்கு 19 வ‌ய‌சாயிட்டு, நாம‌ இப்ப‌ ஒரு டிகிரி ஹோல்ட‌ர்ங்க‌ற‌ எண்ண‌த்தோட‌ க‌ல்லூரியில‌ அடியெடுத்து வெச்சா...என் நினைப்புல‌ எல்லாம் ம‌ண்! என்னால‌ ஹாஸ்ட‌ல் வாழ்க்கையும், அங்குள்ள‌ க‌ஷ‌ட‌மான‌ பாட‌த்திட்ட‌ங்க‌ளையும் ச‌கிச்சுக்க‌வே முடிய‌ல‌.. எப்ப‌ பார்த்தாலும் ஒரே அழுகை தான்.. அங்க‌ ப‌ல‌ பேர் பொறியிய‌ல் ப‌டிப்பும் கூட‌வே வேலை பார்த்த‌ அனுப‌வ‌த்தோடும் தான் வ‌ருவாங்க‌.. அப்போ என்னை ஆற்த‌ல் ப‌டுத்த‌ ப‌ல‌ தோழிக‌ள் சொன்ன‌து ஒரே விஷ்ய‌ம் தான்: "உன‌க்கு வ‌ய‌சு ப‌த்தாது!!"...


என்ன‌ ப‌ண்ண‌, ந‌ம‌க்கெப்போதும் குழ‌ந்தை ம‌ன‌சு தான்.. :))


நான் இந்த‌ ப‌திவை தொட‌ர‌ அழைப்ப‌து ச‌கோத‌ரி ம‌லீக்கா & ஜ‌லீலா

Sunday, January 31, 2010

கொலைசெய்றபட்டினம்!

தீபா அவங்க சின்ன வயசில ஏமாந்த கதைய ரொம்ப அழகா சொல்லி இருந்தாங்க. அதை படிச்ச உடனே எனக்கும் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிட்டு..


அப்படியே ஒரு பதினைஞ்சு வருஷம் பின்னாடி போனா என்னுடைய அஞ்சாம் வகுப்பறை தெரியும். அப்போ தமிழ் வகுப்பு, நாங்க தான் ஏ செக்ஷனுக்கு போகனும். எப்பவும் போல மிஸ் ஏதோ சொல்லிட்டு இருக்க, நானும் அவளும் கதை அடிச்சிட்டு இருந்தோம். அப்போ நான் அவகிட்ட 'ஏய் உங்க ஊரு பேரு என்னடி'ன்னு கேட்டதுக்கு 'கொலசேரபட்டினம்'ன்னு சொன்னா. எங்கும்மா ஊரு பக்கத்து ஊருதானே அதனால கேள்விப்பட்டிருக்கேன்னு சொன்னேன். அதோட நிக்காம 'ஆமா ஏன்டி உங்க ஊரு பேரு கொலசேரபட்டினம்'?ன்னு கேட்டேன். அப்போ அவ ஒரு பெரிய கதைய சொல்ல ஆராம்பிச்சா.. "அடியேய் உனக்கு தெரியாதா டீ, எங்க ஊருல, அந்த காலத்துல தடியா, சுருட்ட முடியும், பெரிய மீசையும் வெச்ச‌ ஒரு ஆளு கையில‌ அருவாளோட‌ வ‌ர‌வ‌ங்க‌ போற‌வ‌ங்க‌ளையெல்லாம் வெட்டி கொலை செஞ்சிட்டே இருந்தானாம், அத‌னால‌த்தான் எங்க‌ ஊருக்கு கொல‌செய்ற‌ப‌ட்டின‌ம்ன்னு பேரு வ‌ந்துச்சு".

நானும் ந‌ம்ம‌ த‌மிழ் சினிமாவுல‌ வ‌ர்ற‌ வில்ல‌ன் க‌ண‌க்கா ஒரு உருவ‌த்த‌ க‌ற்ப‌னை ப‌ண்ணி (எக்ஸ்ட்ராவா க‌ன்ன‌த்துல‌ ஒரு ம‌ச்ச‌ம் வேற‌) ரொம்ப‌ பய‌ந்த்துட்டு இருந்தேன்.. ஒரு நாள் ரொம்ப‌ ஆர்வ‌ம் தாங்க‌ முடியாம‌ எங்கும்மாகிட்ட‌ போயி "ம்மா அந்த‌ கொலைசெய்ற‌ப‌ட்ன‌த்துல‌ இருந்த‌ கொலைகார‌ன‌ நீங்க‌ பார்த்திருக்கீங்க‌ளாம்மா"ன்னு கேட்டேன்.. உட‌னே எங்கும்மா "அட‌ போலா நீ வேற‌ எவ‌ளோ சும்மா சொல்லிருக்கா"ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க‌. ம‌றுநாள் ஸ்கூலுக்கு போயி "ஏன்டி எங்கிட்ட‌ பொய் சொன்ன‌"ன்னு கேட்ட‌துக்க்கு கேவ‌ல‌மா என்ன‌ பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா பாருங்க‌..

இப்ப‌ நாங்க‌ பேசினாலும் அதைப்ப‌த்தி சிரிச்சுக்குவோம்.


அந்த‌ ஊரோட‌ பேர் குல‌சேக‌ர‌ப்ப‌ட்டின‌ம். :)

***


எங்க‌ அப்பாக்கு (த‌ந்தையின் தந்தை) பித்த‌ளைக்க‌டை வியாபார‌ம். ம‌த்த‌ பொருளுங்க‌ளோட‌ சேர்த்து சில‌ நேர‌ங்க‌ள்ல‌ பித்த‌ளையில‌ செஞ்ச‌ அழ‌கான‌ பூ ஜாடி, அல‌ங்கார‌ப்பொருட்க‌ள் எல்லாம் வ‌ரும். அப்ப‌டி நான் முத‌ல் வ‌குப்பு ப‌டிக்கும்போது பித்த‌ளையில‌ சொப்பு சாமானும் வந்த்துச்சு. எங்க‌ அப்பா என‌க்கு என் மாமி ம‌க‌ளுக்கும் கொடுத்து விளையாட‌ சொன்னாங்க‌. மாமி ம‌க‌ என்ன‌ விட‌ அஞ்சு வ‌ய‌சு பெரிய‌வ‌ங்க‌. அவ‌ங்க‌ளே எல்லாத்தையும் எடுத்து வெச்சுப்பாங்க‌. ஆனா விளையாடும்போது சேர்ந்து விளையாடுவோம். ஒரு நாள் அவ‌ங்க‌ எப்ப‌வும் போல‌ எடுத்துட்டு போயிட்டாங்க‌. 'ம‌ச்சி, அந்த‌ சொப்பு எங்க‌ ம‌ச்சி'ன்னு கேட்ட‌ப்ப‌ சுவற‌ காமிச்சு 'பாத்தியா இந்த‌ சுவ‌த்துக்குள்ள‌ தான் நான் அதை ஒளிச்சு வெச்சிருக்கேன். அப்புற‌மா எடுத்து த‌ர்றேன்"னு போய்ட்டாங்க‌. அந்த‌ சுவ‌ற்றையே எத்த‌னையோ நாள் ஆசையா பார்த்து பார்த்து எப்ப‌டித்தான் அதை ம‌ற‌ந்து போனேன்னே தெரிய‌ல‌. ஆனா அந்த‌ சொப்பை இன்னொரு த‌ட‌வை பாக்க‌ முடியுமாங்க‌ற‌ ஏக்க‌ம் ம‌ட்டும் இன்னும் போக‌வெ இல்லை.

****

Wednesday, January 27, 2010

ஹலோ ப்ளீஸ் உங்க வேலைய மட்டும் பாருங்க...

அட ஒரு மாசம் ஆகப்போகுதா பதிவெழுதி? நாள் எப்படித்தான் ஒடுதுன்னே தெரியலப்பா...!


பதிவுலகில் நடக்கும் காமெடியை முன்னிட்டு ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க களத்தில் குதித்திருக்கும் சகோதரி ஹூசைனம்மாவை பாராட்டி ஒரு சட்டி பிரியாணி அனுப்பி வைக்கப்படும்.

அதே மாதிரி ஆண்களை அடிமைப்படுத்துற‌ ச‌ர்ச்சைக்குரிய‌ விஷ‌ங்க‌ளான‌ கோட்டு சூட்டு, டைய‌ ப‌த்தி எல்லாம் கூட‌ எழுதினா அவ‌ங்க‌ளுக்கும் பிரியாணி ச‌ட்டி அனுப்பி வைக்க‌ப்ப‌டும்..


***

நாம‌ பாட்டுக்கு ந‌ம்ம‌ வ‌ழியில‌ போயிக்கிட்டு இருக்கும்போது பெண் சுத‌ந்திர‌ம் பேசுறேன் பேர்வ‌ழின்னு வெட்டியா எழுதுற‌த‌ நினைச்சா சிரிப்பு தான் வ‌ருது.. இவ‌ங்க‌ளுக்கெல்லாம் விள‌க்க‌ம் சொல்லி மாளாது.


ஒவ்வொருத்த‌ருக்கும் த‌ங்க‌ளுடைய‌ த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில‌ சில‌ முன்னுரிமைக‌ள் இருக்கும் (ப்ரையோரிட்டீஸ்). அது தாங்க‌ள் பின்ப‌ற்றுகிற‌ மார்க்க‌மாக‌ இருக்க‌லாம், இல்லை ஒரு கொள்கையாக அல்லது லட்சியமாக அல்லது இது எல்லாமே கலந்ததாக‌ கூட‌ இருக்க‌லாம். அடுத்த‌வ‌ங்க‌ ச‌கிப்புத்த‌ன்மைய‌ சோதிக்காத‌ வ‌கையில‌ இருக்குற‌ வ‌ரைக்கும் ந‌ல‌ம். 

ஏன் என்ன மாதிரி ஒரு சில பேருக்கு தங்களுக்கு பிடித்த வேலையை மட்டுமே கேரியராக எடுத்துக்க பிடிக்கும். எனக்கு நம்பர்ஸே புடிக்காது. ஆனா நான் ஒரு ஃபைனான்ஸ் ஸ்பெஷலிஸ்ட். எவ்வளவு நாளானாலும் பொறுமையா எனக்கு பிடித்த வேலைய தேர்ந்தெடுத்தேன்.. எனக்கு பிடித்த வேலைய தேர்ந்தெடுக்க எவ்வளவு முனைந்தேனோ அதே அளவு என்னுடைய சில கொள்கைகளை மதிக்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்தேன்.

என்னுடைய ஹிஜாபினால எனக்கு பல நன்மைகள் இருந்தாலும் அதுல முக்கியமானது என்னன்னா நிறைய பேர் என்னை நல்லா நினைவுல வெச்சிருப்பாங்க.. பின்ன க்ளாஸ்லயே ஒரு மண்டை மட்டும் தனியா தெரிஞ்சா அப்படித்தானே ஆகும். அதனால க்ரூப் டிஸ்கஷன்ல எல்லாம் நான் என்ன பேசுறேன் என்பதை அடுத்தவங்களை கவனிக்க வைக்கிறது ரொம்ப சுலபம். அதே போல‌ ஒரு சில‌ விரிவுரையாள‌ர்க‌ள் என்னை ரொம்ப‌வே ஊக்க‌ப்ப‌டுத்துவாங்க‌, நான் ப‌டிப்ப‌தை பெருமையாக‌வும் நினைப்பாங்க‌.

நான் கேம்பஸ்ல இன்டெர்வியூ வரைக்கும் போனது இரண்டு நிறுவனங்கள். அதில் முதல்ல போனது பெங்களூரில இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனம். சின்ன‌ வ‌ய‌சுல‌ இருந்தே பேச்சுப்போட்டிகள்ல‌ ஆர்வ‌மா க‌ல‌ந்துக்கிட்ட‌தால‌ க்ரூப் டிஸ்க‌ஷ‌ன், ப்ரெசென்டேஷ‌ன்ல‌ எல்லாம் கொஞ்ச‌ம் ந‌ல்லாவே ப‌ண்ணுவேன்னு ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லுவாங்க‌. அப்ப‌டி ஜிடி முடிஞ்சு இன்ட‌ர்வியூ போன‌ப்போ அவ‌ங்க‌ளோட‌ கேள்விக‌ள் முக்கால்வாசி என்னுடைய‌ ச‌மூக‌த்தை சுத்தி தான் இருந்த‌து. அந்த‌ நாள் வ‌ரைக்கும் போன இடங்களில் எல்லாம் ஊக்க‌த்தையே பார்த்த‌ நான் கொஞ்ச‌ம் டிஸ்க‌ரேஜ் ப‌ண்ணுவ‌து போல் இருந்த‌து. டிஸ்கரேஜுன்னு சொல்வதை விட கொஞ்சம் எரிச்சப்படுத்துவது போலவே இருந்துச்சு. எதிர்ப்பார்த்த‌து போல‌வே செலெக்ட் ஆக‌ல‌.

அடுத்து போன‌து ஒரு புகழ்பெற்ற கார்மென்ட் நிறுவ‌ன‌ம். அந்த‌ இன்ட‌ர்வியூவை என் வாழ்க்கையில‌ ம‌ற‌க்க‌ முடியாது. போன‌ நிறுவ‌ன‌த்துல‌ கேட்ட ப‌ல‌ கேள்விக‌ள் என் குடும்ப‌த்தையும், ச‌மூக‌த்தையும் சார்ந்த‌துன்னா இந்த‌ முறை அது ம‌ட்டும்தான் கேள்வியே. ஆனா அவ‌ங்க‌ கேட்ட‌ வித‌ம் ரொம்ப‌ ந‌ல்லா இருந்துச்சு. திரும்ப‌ திரும்ப‌, "நாஸியா, நாங்க‌ உங்க‌ள‌ ம‌ட்டும் தான் நீங்க‌ போட்டிருக்குற‌ உடைய‌ பாத்து கேக்குறோம்னு நினைக்காதீங்க‌. இதே எங்க‌ முன்னாடி நெத்தி நிறைய‌ ப‌ட்டை போட்டுட்டு ஒருத்த‌ர் இருந்தாலும் இதைபோல‌ கேள்விக‌ளை நாங்க‌ நிச்ச‌ய‌மா கேட்டிருப்போம்"ன்னு சொன்னாங்க‌. கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணி நேர‌ம் ந‌ட‌ந்த‌ அந்த‌ இன்டெர்வியூ முடிஞ்ச‌ பிற‌கு செல‌க்டான‌ விஷ‌ய‌ம் தெரிய‌ வ‌ந்த‌து. நான் கேட்ட லொகேஷன்ல கிடைக்காததால‌ அந்த‌ வேலைய‌ ஏத்துக்க‌ முடிய‌ல‌.

அதுக்க‌ப்புற‌ம் ந‌ம்ம‌ சென்னையில‌யே என‌க்கு பிடித்த‌ வேலை கிடைச்ச‌து வேற விஷ‌ய‌ம். ஆனா இங்க‌ இன்ட‌ர்வியூவில‌ முழுக்க‌ முழுக்க‌ ஃபைனான்ஸ் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ள் தான். ஒரு கேஸ் ஸ்ட‌டிய‌ குடுத்து அதை சால்வ் ப‌ண்ண‌ சொல்லி அதை சுத்தியே கேள்வி கேட்டாங்க‌. வேலைல‌ சேர்ந்த‌ப்போ நோன்பு கால‌ம்.  அப்போ எங்க ஆஃபீஸ்ல நான் ஒருத்தி தான் நோன்பு.. சேர்ந்த முதல் நாளே என்னுடைய பாஸே வ‌ந்து நீங்க‌ சீக்கிர‌ம் வீட்டுக்கு கிள‌ம்புங்க‌ன்னு சொல்லிட்டார். அதே போல‌ ஆஃபீஸ் பார்ட்டிக‌ளை எல்லாம் நான் அட்டென்ட் ப‌ண்ண‌ இய‌லாதுன்னு சொல்லும்போது ப‌ர‌வாயில்லை, நாங்க‌ எதுவும் நினைச்சுப்போமோன்னு நீங்க‌ ஃபீல் ப‌ண்ணாதீங்க‌ன்னு ரொம்ப‌ ஆறுத‌லா பேசினார்.

அவ‌ர் ம‌ட்டும் இல்லை, இது வ‌ரைக்கும் நான் க‌ட‌ந்து வ‌ந்த‌ இட‌ங்க‌ள் ப‌ல‌வ‌ற்றிலும் நான் ச‌ந்தித்த‌ ம‌னித‌ர்க‌ள் ப‌ல‌ர் என்னை க‌ண்ணிய‌மாக‌வே ந‌ட‌த்தினாங்க‌. அவங்க பார்த்தது என் அறிவை மட்டும்தான்.  ஒரு பெண்ணாக‌ நான் விரும்பிய‌ ப‌டிப்புகளை ப‌டிக்க‌ முடிந்த‌து, நான் விரும்பிய‌ வேலையை செய்ய‌ முடிந்த‌து‍: அத்த‌னையும் என் ஹிஜாபோடு.
இப்ப‌ சொல்லுங்க‌, நாம‌ இய‌ல்பா அணியுற‌ உடைய‌ வெச்சு இவ்வ‌ள்வு பெரிய‌ ச‌ர்ச்சைய‌ உண்டு ப‌ண்ண‌னுமா? அப்ப‌டி ப‌ண்ணுற‌வ‌ங்களுக்கெல்லாம் ப‌தில் சொல்லி மாளாது. ஆனா அமைதியா இருந்தா ஒருவேளை அதெல்லாம் உண்மை போல‌ ஆகிடுமோன்னு தான் இந்த‌ ப‌திவு..