அட, தொடர்ந்து மூணாவது பதிவும் தீபா அவர்களின் அழைப்பால்!! ஹிஹி..
***
கொஞ்சம் சீரியஸாக, என்னுடைய நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பத்தி எழுதனும்.. நான் பதினாலு வருஷமும் படிச்சது முஸ்லிம்களால் நடத்தப்படும் பெண்கள் பள்ளியில், என் பிறந்த வீடும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் தான்.. ஆனா எங்க வீட்டுல மட்டும் ஒரு ஸ்பெஷல்.. கீழ் விட்டில் வட இந்தியர்களும், முதல் மாடியில் கேரளத்தை சேர்ந்தவங்களும் இருந்தாங்க.. மார்வாடிகளோட அதிகம் பழக்கமில்லைன்டாலும் கேரளாக்காரங்களோட எங்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது.. அந்த அங்கிளும் ஆன்ட்டியும் எங்கும்மா மேல உயிரா இருப்பாங்க.. ஆனா என் வயசில யாருமே இல்லை.. அதனால விளையாட்டெல்லாம் தம்பி, மாமி, சாச்சாமார் மக்களோடத்தான்..
பள்ளியிலயும் இரண்டு, மூன்று மாணவிகளைத்தவிற மாற்று மதத்தை சேர்ந்தவங்க கிடையாது.. இப்படி இருந்த எனக்கு எங்க கம்மா (பாட்டி) வீடு ஒரு தனி உலகம்.. அவங்க அப்போ பொன்னேரியில இருந்தாங்க.. அங்க ஒரு காலனி மாதிரி இடம்... அங்க நாங்க மட்டும்தான் முஸ்லிம்.. இதுல காமெடி என்னன்னா, என் பேரே பாதி பேரு வாய்ல நுழையாது.. என்னை சின்ன வயசிலேயே பாயம்மான்னு கூப்டு கிண்டல் பண்ணுவாங்க.. ஹிஹி..
அங்க ஒரு பாம்பு புத்து இருந்தது.. அதை சுத்தி சுவர் எழுப்பி அதை ஒரு வழிபாட்டு தலம் மாதிரி கட்டியிருந்தாங்க.. நாங்க வாண்டுகள்லாம் அங்க தான் போயி விளையாடுவோமே.. முக்கியமா சொப்பு சாமான் விளையாட ஏத்த இடம் அது தான்.. ஒரு போதும் எங்க கம்மாவோ, எங்கும்மாவோ அங்கல்லாம் போகக்கூடாதுன்னு என்னை தடுத்ததும் இல்ல, என்னை அங்க சேர்த்துக்க கூடாதுன்னு மத்தவங்க யாரும் சொன்னதும் இல்லை.. என்ன, அவங்க அந்த புத்தை கும்பிடுவாங்க, நாம அதை செய்யக்கூடாதுங்குறது மட்டும் எனக்கு தெரிஞ்சிது.
அதே காலனியில தான் முதன் முதல்ல எனக்கு கிறிஸ்தவர்கள் அறிமுகமும் கிடைச்சது.. அங்க கிறிஸ்துமஸ் அப்போ மரத்தை அழகா அலங்கரிச்சுருப்பாங்க..எங்க வயசு பிள்ளைங்க யாரும் அங்க இல்லன்டா கூட சும்மாவாச்சும் நாங்கல்லாம் அவங்க வீட்டுக்கு போவோம்..
இப்படித்தான் மாற்று மதத்தவர்களைப் பத்தின விவரம் எனக்கு சின்ன வயசில தெரிஞ்சது... எங்க வீட்ட பொறுத்தவரைக்கும் முஸ்லிம்கள்னா ஆண்கள் தொப்பி போடுவாங்க, பெண்கள் தலையிலயும் சீலை போடுவாங்க, பெருநாள் கொண்டாடுவோம் (அப்பமும் என்ன, பெருநா காசும் பிரியாணியும் தான்), கல்யாணம் இல்ல கடை திறக்கனும்னா ஃபாத்தியா ஓதுவாங்க.. அவ்வள்வு தான்..
எங்க கம்மா (அம்மாவின் அம்மா) வீட்டுல தொழுகை எல்லாம் பார்க்க முடியும்.. ஆனா அவங்களும் சரியான தர்கா பார்ட்டி.. அதாவது ஒரு மனிதரின் அடக்கஸ்தலத்துக்கு பச்சை போர்வை போட்டு அங்க ஒரு தாத்தா மயிலிறகுல செஞ்ச துடைப்பத்தால நம்ம முகத்த பெருக்கி விடுவாரு.. அதுக்கு பேரு தான் தர்கா.. வெள்ளிக்கிழமையானா தவறாம எங்க கம்மா என்னை அங்க கூட்டிட்டு போயிடுவாங்க.. நானும் அங்க இருக்குற குட்டி குட்டி தவளைங்கள பாக்க ஆசையா போவேன்.. (கூடவே பூந்திக்காகவும்.. ஹிஹி).. ஆனா இதெல்லாம் தவறுங்கறது கொஞ்ச லேட்டாதான் தெரிஞ்சது..
அந்த வயச பொறுத்த வரைக்கும் நாம அல்லாஹ் ஒருவனைத்தான் வணங்க வேண்டும் என்பது எப்படியோ ஓரளவுக்கு எங்க பள்ளியில சொல்லிக்கொடுத்த வரைக்கும் தெரியும்... அது போல மாற்று மத நண்பர்கள் "உங்க அல்லாஹ் எப்படி இருப்பாரு"ன்னு கேட்டா "அல்லாஹ்வை நாம பாக்க முடியாது, ஒரு நபி (மூஸா/மோசஸ்) அல்லாஹ்வை பாக்கனும்னு கேட்டப்போ அல்லாஹ்வோடைய ஒளி மட்டும் பட்டு ஒரு மலையே தூள் தூள் ஆயிடுச்சாம்" ங்கற அளவுக்கு தான் தெரியும்..
நான் ஆறாவது படிக்கும்போது எக்ஸ்கர்ஷனுக்கு போகனும், திங்க எதாச்சும் வாங்கி குடுங்க வாப்பான்னு கேட்டப்போ என்னை வெளிய கூட்டிட்டு போனாங்க.. போகும்போது வாப்பா, "நாம யார வணங்கனும்?" அப்படின்னு கேட்டாங்க.. நானும் "அல்லாஹ்வைத்தான் வணங்கனும்"னு சொன்னேன்.. "அப்போ, அந்த தர்காவில யாரோ ஒரு மனிதரைத்தானே அடக்கம் செஞ்சிருக்கு, அப்ப ஏன் அதுகிட்ட போயி எனக்கு அது செய், இது செய்னு கேக்குறீங்க"ன்னு வாப்பா கேட்டதும் தான் நான் யோசனை பண்ணினேன்..
அதே கேள்விய எங்க கம்மாகிட்ட கேட்டப்போ அவங்க எனக்கு சரியா பதில் சொல்லலை.. எப்படியோ இறைவன் அருளால் இஸ்லாமிய கல்வி மூலமா இஸ்லாத்தில் இடைத்தரகர்கள் கிடையவே கிடையாது, இறைவனுக்கு இணை வைத்தல் மிகப்பெரிய பாவம்னு விளங்கியது...
குரானை அரபியில சரியான உச்சரிப்போட ஓதவும், ஓரளவுக்கு இஸ்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்க என் பள்ளி மிகவும் உதவியது... அது போல பள்ளி இறுதி நாட்கள்ல நானே குரானை தமிழாக்கத்தோடு படிக்கத்தொடங்கினேன்.. அப்பத்தான் தெரிஞ்சது, எவ்வளவு பெரிய அற்புதத்தை நம்ம கையில வெச்சிருக்கொம்னு..
கல்லூரிக்கு போனதும்தான் "ஆமா, நீ ஏன் இந்த முக்காடு போடுற"ன்னு ஒவ்வொருத்தரா கேக்க ஆரம்பிச்சாங்க.. ஒரு சிலர் ஒரு மாதிரி இரக்கத்தோடும் ஒரு சிலர் கிண்டலாகவும் கேப்பாங்க..
என்னுடைய இறைநம்பிக்கையும், இஸ்லாத்தை பத்தின அறிவும் வளர ஆரம்பிச்சது இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பிச்ச பிறகு தான்.. மேலாண்மை படிக்கும்போது அங்குள்ள விடுதி மெஸ்ல போடுற கோழிக்கறி ஹலால் கிடையாது, அதனால அங்க நான் கிட்டத்தட்ட ஒரு வெஜிடேரியன்.. நண்பர்களெல்லாம் ஏன்னு கேக்குறப்போ, ஹலால்னா என்னன்னு விளக்குவேன்.. அதே மாதிரி ஏதாச்சும் நல்ல உடை போட்டுட்டு, வெளிய கிளம்பும்போது நான் துப்பட்டாவைக்கொண்டு முழுசா மறைச்சதும் 'ஏன்டி, இவ்வளவு நல்ல ட்ரெஸ் போட்டுட்டு இப்படி மறைக்கிற'ன்னு கேப்பாங்க.. நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிறது எனக்காக தான்டி, ரோட்ல போறவங்களுக்காக இல்லன்னு ஒவ்வொரு தடவையும் விளக்கனும்.. ஹிஹி...
அதே போல நான் நிதி நிர்வாகவியல்ல (அதாம்பா ஃபைனான்ஸ்) சேர்ந்ததும் வட்டி என்பது இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவங்களில் ஒன்று, அதற்கு மாற்றாக இஸ்லாமிய வங்கிமுறை பத்தி மத்தவங்களுக்கு விளக்க அதை பத்தி படிச்சேன்.. 'அதெப்படி வட்டி இல்லாம வியாபாரம் சாத்தியம்'ன்னு கேக்குறவங்களுக்கு விளக்கவே இன்னும் நிறைய இஸ்லாத்தை பத்தி தெரிஞ்சிகிட்டேன்...
இப்படி நேரடியா கேள்வி கேட்டவங்க ஒரு பக்கம்னா, வலைத்தளங்களில் இஸ்லாத்தை பத்திய விமர்சனங்களை படிச்சு அதை தெளிவு படுத்திக்க நான் இஸ்லாத்தை இன்னும் அதிகமா கத்துக்கிட்டேன்..
இப்படி இறைநம்பிக்கை என்பது இறைவன் ஒருவனேங்குற கோட்பாடுல தொடங்கி, நாம் வாழும் வழிமுறைகள் இறைத்தூதர் முஹம்மது நபி சல் அவர்கள் வாழ்ந்த்த அடிப்படையில் என்பது வரைக்கும் என்னுடைய நம்பிக்கை ஆழமா வளர்ந்துட்டே இருக்கு.. பொறுமையும், மன்னிக்கும் மனமும் நம் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக்கிடும்கிறது குரானை படிச்சா விளங்கும்.. கொஞ்சம் யோசிச்சு பார்த்தா என்னதான் மனிதன் எப்பேர்ப்பட்ட சாதனைகளை செய்திருந்தாலும் ஒரு அளவுக்கு மேல சில விஷங்கள் நம்ம கையில் இல்லை.. இதை உணர்ந்தவங்க பொறுமையோட இருப்பாங்க, உணராதவங்க நிம்மதியை தொலைச்சிடுவாங்க..
படிக்கும் காலங்களில் விளையாட்டுப்போக்கா இருந்தாலும், இறைநம்பிக்கை எனக்கு என்றும் உறுதியாக இருந்திருக்கு, இறைவனின் அருளால்.. ஈமான் என்னும் இறைநம்பிக்கை எனக்கு வாழ்க்கைய ரொம்ப எளிதா ஓட்ட்க்கத்துக்கொடுத்திருக்கு..
அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் இறைவனுக்கே!!
****