Sunday, December 27, 2009

பிரியாணி சட்டி: 28.12.2009

இங்க வந்து ரெண்டு மாசம் ஆக போகுது.. வீட்ட ரொம்ப தேடினாலும் எனக்கென்னமோ வேற நாட்டுல இருக்குற மாதிரி இல்லை..எங்க பாத்தாலும் நம்ம ஊரு மக்கள்..சேட்டன்மார்கள் நம்ம ஊரு சாமான் ஒண்ணு விடாம இங்க கொண்டு வந்து விக்குறாங்க..எங்க ஆளுக்கு இருமல்ன்னதும் பனங்கற்கண்டு பாலில் காய்ச்சு குடுக்க சொன்னாங்க. கொண்டு வராம இருந்துட்டமேன்னு ரொம்ப ஃபீல் பண்ணினேன். சரி கேட்டுத்தான் பாப்போமேன்னு பாத்தா, அட, கிடைச்சுது!என்ன, நம்ம ஊரு துடைப்பம் இல்லாம தான் ரொம்ப கடுப்பா இருக்கு. அல் ஐனில் இருக்குன்னு சொன்னாங்க.. பாப்போம்!
***

நாங்க இருக்கும் ஏரியாவில் நம்ம ஊரு மக்கள் ரொம்பவே அதிகம்! அப்படித்தான் ஒரு நாள் நாங்க கடைக்கு போகும்போது ஒருத்த‌ர் ஃபோன்ல‌ த‌மிழ்ல‌ பேசிட்டே வ‌ந்தார். நானும் அப்போ எங்க வீட்டுக்காரர் கிட்ட‌"ஏங்க‌, துபாய்ல‌ த‌மிழாட்க‌ள் ஜாஸ்தில"ன்னு சொல்லிட்டே வ‌ந்தேன்.. கொஞ்ச‌ நேர‌த்தில‌ அந்த‌ ஆள் ஒரே கெட்ட‌ வார்த்தைக‌ளா பேச ஆர‌ம்பிச்சிட்டாரு.. என‌க்கு தூக்கி வாரி போட்டுருச்சு.. தெரியாத்த‌ன‌மா ச‌ந்தோச‌ப்ப‌ட்டுட்ட‌னோ.. :|
***

அதே மாதிரி இன்னொரு நாள் நாங்க‌ ந‌ட‌ந்து போயிட்டு இருந்தப்போ திடீர்ன்னு ஒருத்தர் பாய்ஞ்சு வந்த மாதிரி வந்து செய்கையால யாசகம் கேட்டார்.. அவர் பாகிஸ்தானி உடை போட்டுட்டு முக‌த்தையெல்லாம் மூடிட்டு ஒரு மாதிரி இருந்தார். செம்மையா ப‌ய‌ந்து, "அல்லாஹு அக்ப‌ர்"ன்னு ரோட்ல‌யே க‌த்திட்டேன்..எங்க‌ வீட்டுக்கார‌ர் இது தான் சான்ஸ்ன்னு ப‌ய‌ங்க‌ர‌மா என்னை ஓட்ட‌ ஆர‌ம்பிச்சுட்டாங்க‌. :(

***

இந்த‌ ஊரில் கூட‌ குப்பை பொறுக்குப‌வ‌ர்க‌ளை பார்க்கும்போது ஒரு மாதிரி இருக்கு. என‌க்கென்ன‌மோ ந‌ம்ம‌ ஊருல‌ குப்பை பொறுக்குற‌வ‌ங்க‌ குறைஞ்சிட்டாங்க‌ன்ற‌ மாதிரி ஒரு நினைப்பு. க‌ட‌ல் க‌ட‌ந்து வ‌ந்து இதைத்தான் செய்கிறார்க‌ள் என்று அவ‌ங்க‌ உற‌வின‌ர்க‌ளுக்கு தெரிந்தால் வ‌ருத்த‌ப்ப‌டுவாங்க‌ தானே? எங்க‌ தெருவில் ஒரு வ‌ய‌தான‌ பாகிஸ்தானி பெரிய‌வ‌ர் வ‌ந்து குப்பையில் இருக்கும் அட்டை, காலி டின்க‌‌ள் போன்ற‌வ‌ற்றை எடுப்பார். ஒரு நாள் பார்த்தா அதில‌ உள்ள‌ பெரிய‌ பெரிய‌ ரொட்டிக‌ளை எடுக்க‌ ஆர‌ம்பிச்சிட்டார்.. என‌க்கு ரொம்ப க‌ஷ்ட‌மா போச்சு..அப்புற‌ம் தான் கேள்விப்ப‌ட்டேன் அதெல்லாம் ஒட்ட‌க‌த்துக்கு போட‌ எடுக்குறாங்க‌ன்னு.. ஏதோ கொஞ்ச‌ம் நிம்ம‌தியா இருந்துச்சு..

***
ஒரு ப‌க்க‌ம் வேட்டைக்கார‌ன், இன்னொரு ப‌க்க‌ம் க‌ந்த‌கோட்டை. சன் டிவி சார்ந்த‌ சேன‌ல்க‌ளில் வேட்டைக்கார‌ன் தொல்லைன்னா, ம‌த்த‌ எல்லா சேன‌ல்க‌ளிலும் க‌ந்த‌கோட்டை தொல்லை.. தாங்க‌ முடிய‌லை!! ப‌த்தாத‌த‌ற்க்கு இந்த‌ ரியாலிட்டி ஷோக்க‌ள் வேற‌. என்ன‌ கொடுமை சார்..

***
ச‌ரி நானும் க‌ல‌வை ப‌திவு போட‌ ஆர‌ம்பிச்சிட்டேன்! ஒகே ரைட், ரைட்!

Tuesday, December 22, 2009

பேனாவும் பேப்பரும்..

இருந்தா போதும்..நாமளும் கவிஞர் ஆகிடலாம்.
எப்படின்னு சொல்லுறேன். அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளேஷ்பேக்.

நாம பள்ளியில படிக்கும்போது மிஸ் பேச கூடாதுன்னு சொல்லுவாங்க, ஆனா க்ளாஸ் ரொம்ப மொக்கையா இருக்கும். வேற வழியில்லாம புத்தகத்தோட கடைசி பக்கத்துல எழுதி தோழிமாரோட பேசிட்டு இருப்போம் இல்லையா? எனக்கு இந்த கிறுக்குற பழக்கம் ரொம்பவே அதிகம். ஆனா ஸ்கூல்ல கடைசி நாலு வருஷம் நான் கொஞ்சம் 'படிக்கனும்'ங்கற 'பொறுப்புணர்ச்சி'யால அப்படி அவ்வளவா எழுதல.


காலேஜ் வந்த பிறகு முதல் வருசம் வெறும் மூணு மணி நேரம்தான் வகுப்புகள்.. அப்போவும் கொஞ்ச ஆர்வக்கோளாருல மேம் சொல்லுறத கவனிச்சிட்டு இருந்தேன். ஆனா கடைசி ரெண்டு வருஷம் முழுக்க படிப்ப தவிர காலேஜ்ல‌ என்ன‌ன்ன‌ ப‌ண்ண‌ முடியுமோ அத்த‌னையும் ப‌ண்ணிட்டு இருந்தேன் (அதாங்க‌, எக்ஸ்ட்ரா க‌ர்ரிகுல‌ர்). அதுவும் ஃபைன‌ல் இய‌ர் சொல்ல‌வே வேண்டாம், என்னை வேற‌ செக‌ர‌ட்ட‌ரியா போட்டு, நான் பெர்மிஷ‌ன் வாங்கி குடுத்தா ம‌த்த‌வ‌ங்க‌ளும் க‌ட்ட‌டிக்கலாம்ங்க‌ற‌ நிலைமை வேற‌.. அப்புற‌ம் என்னாகும், வ‌ருச‌ம் முழுக்க‌ மொத்த‌ம் ஒரே ஒரு நாள்தான் க்ளாஸ்ல‌ இருந்தேன்!


இப்ப‌டி இருந்த‌ புள்ளைய‌ போய் மேல்ப‌டிப்பு ப‌டிக்க‌ சொன்னா என்ன‌ ப‌ண்ணுவா (ஹி,ஹி, யாரும் சொல்ல‌ல‌, நானா எடுத்த‌ முடிவுதான்!). அங்க‌யும் போய் க‌ட்ட‌டிக்க‌லாம்னு நினைச்சிட்டு இருந்த‌ என் நினைப்புல‌ எல்லாம் ம‌ண்!


விடாம‌ தொட‌ர்ந்து நாலு ம‌ணி நேர‌ம் க்ளாஸ் ந‌ட‌க்கும், யாராச்சும் விசிட்டிங் வாத்தியார்க‌ள் வ‌ந்துட்டா போதும், இர‌வு ஒரு ம‌ணிக்கு கூட‌ க்ளாஸ‌ வெச்சு க‌ழுத்த‌றுப்பாங்க‌.  இதுல ஞாயிற்றுக்கிழ‌மை ஆனா போதும், காலைல‌ எட்டுல‌ இருந்து இர‌வு எட்டு வ‌ரைக்கும் ஒரே பாட‌ம் ந‌ட‌க்கும். அப்பல்லாம் எல்லாரும் சீக்கிரமா காலைல சாப்பிட்டுட்டு அவசர அவசரமா முதல் ஆளா க்ளாஸ்க்கு போக பெரும் போட்டியே நடக்கும். ஏன் தெரியுமா? கடைசி வரிசைய புடிக்கிறதுக்கு தான்.

நாங்க‌ எப்ப‌வும் எந்த‌ வ‌ரிசையில‌ உட்கார‌துன்னு ரொம்ப‌ டெக்னிக்கா யோசிப்போம். முத‌ல் வ‌ரிசையும் வேலைக்காவாது, க‌டைசி வ‌ரிசையில‌யும் எப்ப‌வும் வாத்தியாரோட‌ க‌ண்ணு இருக்கும். அத‌னால‌ ந‌டு வ‌ரிசையில‌, சுவ‌ரோர‌மாதான் உட்காருவோம். ஆனா என்ன‌ பிர‌ச்சினைன்னா அது ஏசிக்கு கீழ‌ இருக்குமா, காலைல‌ மெஸ்ல‌ பொங்க‌ல்னா போதும், அப்ப‌டியே துக்க‌ம் க‌ண்ண‌ க‌ட்டும். என்ன‌ ப‌ண்ணுற‌து, எல்லாருக்கும் வாய்க்காத‌ பாக்கிய‌ம் ஒண்ணு என‌க்கு வாய்ச்சிருக்கே, அதாங்க ஸ்கார்ஃப்! அப்ப‌டியே ஒரு ப‌க்க‌ம் க‌ண்ண‌த்துல‌ கையும் இன்னொரு ப‌க்க‌ம் ஸ்கார்ஃப‌ அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணிட்டா போதும்! சார் கண்ணுல‌ ப‌டாம‌ தொட‌ர்ந்து ரெண்டு ம‌ணி நேர‌ம் தூங்கிருக்கேன்னா பாத்துக்கோங்க‌ளேன்!


ஒரு ச‌ம‌ய‌ம் அதுவும் வேலைக்காவாது.. தூங்கி மாட்டிக்கிட்டா மான‌ம் போய்டும், அத‌னால‌ ஸ்கூல்ல‌ ப‌ண்ணின‌ மாதிரி க‌டைசி ப‌க்க‌ கிறுக்க‌ல் தான் ந‌ம்மை காப்பாத்தும்.. அப்ப‌டி ஒருக்க‌ கிறுக்குன‌தை ப‌த்திர‌மா வெச்சிருக்கேன், அது உங்க‌ளுக்காக‌, இதொ!!


யாருக்காச்சும் ப‌டிக்க‌ க‌ஷ்ட‌மா இருந்தா, இதோ உங்க‌ளுக்காக‌வே!!


விஜ‌ய் ப‌ட‌ம் பேரு திருப்பாச்சி


அதை பாத்து என‌க்கு ரொம்ப‌ வெருப்பாச்சி


கீர‌ விக்குற‌ ஆயா பேரு மீனாச்சி


க்ளாஸ‌ விடாம‌ எடுக்குற‌வ‌ங்க‌ளுக்கு இல்லையா ம‌ன‌சாட்சி?????


***

ம‌யில் போல‌ பொண்ணு ஒண்ணு


உங்க‌ எல்லார் த‌லையில‌யும் ம‌ண்ணு
****

oligopoly, monopoly ங்க‌றான்,


என‌க்கு தெரிஞ்ச‌தெல்லாம் ம‌சால‌ போளி, கார‌ போளி தான்,


இருந்தாலும் தண்ணீர் எடுக்க‌ உத‌வும் வாளி,


கிண‌த்துல‌ த‌ண்ணி எல்லாம் காலி,


க்ளாஸ் இல்லைன்னு சொன்னா எங்க‌ளுக்கெல்லாம் ஜாலி

*****

Monday, December 21, 2009

கடனும் வட்டியும் அது போடும் குட்டியும்

பரக்கத்!

தமிழை தாய் மொழியாகக்கொண்ட பல முஸ்லிம்கள் பேச்சு வழக்கில் சில அரபி வார்த்தைகளை கலந்து பாவிப்பதுண்டு. ஹயாத்து (வாழ்வு), மவுத்து (இறப்பு), ரிஸ்க் (உணவு), ராஹத்து (இதம்), நஸீப் (இறைவன் விதித்தது) போன்றவைகளுள் ஒன்றுதான் பரக்கத். பரக்கத் என்றால் பலர் நிறைய பண வரவு மட்டுமே என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பரக்கத் என்பது இறைவனின் அருளால் தன்னிறைவு பெறுதல். அதாவது ஒருத்தர் மாசம் ஒரு லட்சம் சம்பாதிச்சாலும் ரெண்டு லட்சத்துக்கு கிரடிட் கார்டை தேய்ச்சு செலவு செய்கிறவங்களும் இருக்காங்க,அதே போல ஆயிரம் ரூபாயே வருமானம் என்றாலும் அந்த ஆயிரத்துக்குள் குடும்பம் நடத்தி, அதில் கொஞசமாச்சும் மிச்சம் பிடிக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா?


முன்னெல்லாம் நாம கடனாளியா இருக்கறத யாருமே விரும்ப மாட்டோம். எப்படி நமக்கு ஒரு உடல் உபாதை வரக்கூடாதுன்னு நினைப்போமோ அப்படித்தான் கடனாளியாகவும் ஆகக்கூடாதுன்னு நினைப்பொம் இல்லையா?
ஆனா ஒரு ஏழெட்டு வருஷமா என்ன நடக்குது? உலகமயமாக்கல்ன்ற பேர்ல கோக கோல, பெப்சியோட சேர்ந்து வந்த்து தான் இந்த க்ரெடிட் கார்டும். இரண்டு வருசம் முன்னாடி வரைக்கும் நம்ம நாட்டோட பொருளாதாரம் (அதுலயும் எனக்கு உடன்பாடில்லை. நாட்டோட வளர்ச்சி என்பது எல்லா மக்களையும் சேர்ந்தடையும் சமமான வளர்ச்சியாக இருக்கனுமே ஒழிய ஒரு சாரார் மட்டுமே வளர்ச்சியின் பயன்களை அனுபவிப்பது ஏற்க முடியாது) தாறுமாறா வளருதுன்னு பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கூவிக்கிட்டு இருந்தப்போ பத்துல எட்டு பேருக்காச்சும் சார் தயவு செய்து லோன் வாங்கிக்கோங்கன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு போன் கால்கள் வந்திருக்கும் (அது இப்பவும் தொடரத்தான் செய்யுது). உசாரானவங்க தப்பிச்சிருப்பாங்க. ஆனா பல பேர் "சும்மா வரத ஏன் வேண்டாம்னு சொல்லனும்", "நாம என்ன தேய்க்கவா போறோம், சும்மா வாங்கி வெச்சுப்போமே", "இப்ப‌ வாங்கி வெச்சுட்டா ஏதாச்சும் அவ‌ச‌ர‌த்துக்கு உத‌வும்". பெர்ச‌ன‌ல் லோன் ம‌ற்றும் கார்டை வெச்சிருப்ப‌வ‌ங்க‌ பெரும்பாலும் இந்த‌ கார‌ண‌ங்க‌ள்ல‌ ஏதாச்சும் ஒண்ண தான் சொல்லுவாங்க‌, இல்லையா?

இப்ப‌டி வ‌ரைமுறை இல்லாம‌ க‌ட‌ன் குடுக்குற‌தும், க‌ட‌ன் வாங்குற‌தும் அமெரிக்க‌ க‌லாச்சார‌ம். அங்க‌ சேமிப்புங்க‌ற‌து ஒரு கான்ச‌ப்டே இல்லை, அது த‌னி ம‌னித‌னாக‌ இருந்தாலும் ச‌ரி, அர‌சாங்க‌மா இருந்தாலும் ச‌ரி. இன்னும் சொல்ல‌ போனா நாங்க‌ எம்.பி.ஏ வுல‌ ப‌டிச்ச‌ நிதி நிர்வாக‌ம் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ ச‌ப்ஜ‌க்டுக‌ள்ல‌ உள்ள‌ அமெரிக்க‌ன் திய‌ரிஸ்டுக‌ளெல்லாம் க‌ட‌ன் வாங்குற‌தால‌ ஒரு க‌ம்பெனியின் நிக‌ர‌ லாப‌ம் (net profit) கூடும் என்ற‌ எம் & எம் திய‌ரி தான் நாங்க‌ல்லாம் முட்டி மோதி ப‌டிச்சிட்டு இருந்தோம் (சிம்பிளா சொல்ல‌னும்னா, க‌ட‌ன்ல‌ க‌ட்ட‌ வேண்டிய‌ வ‌ட்டி தொகை வ‌ருமான‌ வ‌ரிக்கு உட்ப‌டாது, அத‌னால‌ ஒரு பங்குக்குரிய லாபத்தொகை அதிகமாகுமாம்.. ஏதோ தலையை சுத்தி மூக்கை தொடுவது போல இல்ல?

எப்பவுமே கடன் என்பது ஒரு அவசரத்தேவைக்காக, நம்மிடம் இருப்பது போக வாங்குவதாகத்தான் இருக்கணுமே ஒழிய எளிதா கிடைக்குதேன்னு வாங்கி போடக்கூடாது. இது ஒரு தனி மனிதனுக்கும் மட்டுமல்லாமல் அரசுக்கும், நிறுவனங்களுக்கும் கூட பொருந்தும். உலக பணக்காரர்களில் முதல் இரண்டு இடங்கள்ல இடம் வகிக்கும் வாரன் பஃபெட் கூட அதிகமா கடன் பட்டிருக்கிற நிறுவனங்கள நாட மாட்டாரு.

உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்கு தெரியாது, ஆனா இஸ்லாத்தை பொறுத்தவரை வட்டி வாங்குவது என்பது கொலைக்குற்றத்துக்கு சமம். வட்டி வாங்குபவர் இறைவனுடனும் நபியுடனும் போர் செய்கிறார் என்றே குரானில் இறைவன் கூறுகிறான்.


ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)


ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)


இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)


அப்ப நாம கடன குடுத்துட்டு என்ன செய்றதாம்? அவனுக்கு கடன் குடுக்காம நான் ஒரு தொழிலில் முதலீடு செய்திருந்தாலோ அல்லது ஒரு வீடு கட்டியிருந்தாலோ அது மூலமா எனக்கு வருமானம் வந்திருக்கும். இன்னைக்கு நூறு ரூபாய்க்கு இருக்குற மதிப்பு ஒரு வருஷம் கழிச்சு கண்டிப்பா அதுக்கும் குறைவாதான் இருக்கும் (அதாவது டைம் வேல்யூ ஆஃப் மனி). அப்படி இருக்கும்போது நான் வட்டி கேக்குறது எப்படி அநியாயமாகும்? நான் கடன் கொடுத்ததால இழந்த பணத்தை (ஆப்புர்ட்யூனிட்டி காஸ்ட்) ஈடு செய்யத்தானே கேக்குறேன்? என்ற "நியாயமான" காரணங்களை பலர் எடுத்து வைப்பதை நான் கேட்டிருக்கிறேன். இன்னும் பலர் வட்டின்னா அது மீட்டர் வட்டி, கந்து வட்டி தான், சாதரணமா வங்கிகள் சேமிப்பு மீது கொடுக்கும் வட்டி நியாயமானது தான் என்று கூறுவார்கள்.

நாம‌ முன்ன‌ க‌ட‌ன் எதுக்கு வாங்குறோம்கிற‌ அடிப்ப‌டையை பாத்தோம். இஸ்லாத்துல‌ கட‌ன் கொடுப்ப‌து என்ப‌து த‌ர்ம‌ம் செய்வ‌து போல‌.. க‌ஷ்ட‌த்தில் இருக்கும் ஒருவ‌ருக்கு க‌ட‌ன் கொடுத்து, அவ‌ருக்கு முடியாத‌ ப‌ட்ச‌த்தில‌ அந்த‌ க‌ட‌னை த‌ள்ளுப‌டி செய்வ‌து மிக‌வும் ந‌ன்மைக்குரிய‌ விச‌ய‌மாக‌ க‌ருதப்ப‌டுகிற‌து. அதே போல‌ க‌ட‌ன் வாங்கிய‌வ‌ர் ந‌ல்ல‌ நில‌மையில் இருந்தால் அவ‌ர் வாங்கிய‌தை விட‌ அவ‌ர் இஷ்டத்திற்கு அதை சிற‌ப்பாக‌ திருப்பி கொடுக்க‌லாம். நினைவில் கொள்க‌: க‌ட‌ன் கொடுத்தவ‌ர் அதை ஒருபோதும் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ முடியாது.

எப்படி வட்டியின் மூலம் பணம் சம்பாதிப்பது அனுமதிக்கப்படலயோ அதே போலத்தான் ஸ்பெகுலேசன் எனப்படும் நிச்சயமற்ற தன்மை உடைய வியாபாரத்தில் ஈடுபடுவதும் அனுமதிக்கப்படல. ஆனா பங்கு வர்ததகத்தை வர்த்தகத்துல ரொம்ப சாதரணமா நடக்குது- டே ட்ரேடிங்‍: ஒரே நாளில் பங்கை வாங்கி விற்பது, ஆப்ஷன்ஸ்‍‍: இன்னைக்கு ஒரு பங்குகுக்கு ஒரு விலை நிர்ணயம் பண்ணிட்டு அதை ஆறு மாசம் கழிச்சு விலை குறைஞ்சா வாங்குவது எல்லாமே சூதாட்டத்தை போலத்தான். இரண்டு வருசம் முன்ன ஒரே நாளில் சென்செக்ஸ் பல ஆயிரம் புள்ளிகளை தாண்டுவதும், கொஞ்ச நாளைல அது அதல பாதாளத்தை தொடுவதற்க்கு காரணம் இது தான். பல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்த விளையாட்டை விளையாட நம்ம நாட்ட பயன்படுத்தியது வேற கதை!

இன்றைய‌ கால‌க்க‌ட்ட‌ங்க‌ள்ல‌ வ‌ட்டியும், ஒண்ணுமில்லாத‌ அடிப்ப‌டையில் பங்கு ச‌ந்தையில் ப‌ண‌ம் ஈட்டுவ‌தும் ஒரு நாட்டுடைய‌ பொருளாதார‌ அடிப்ப‌டையை எந்த‌ அள‌வுக்கு ஆட்டி வைக்குதுன்னு அமெரிக்கா என்னும் ஒரு நாடு மூல‌மாக‌வே பார்க்கிறோம்.
ம‌த்த‌ விஷ‌ய‌ங்க‌ளை போல‌வே ப‌ண‌ விஷ‌ய‌த்திலும் அதிக‌ப‌ட்ச‌ ஒழுக்க‌த்தை க‌டைப்பிடிக்கிற‌து எவ்வ‌ள‌வு ந‌ன்மைங்கிற‌து என‌க்கு ஒரளவுக்கு தெரியுது.. உங்க‌ளுக்கு?

டிஸ்கி: அமெரிக்க பொருளாதரத்தை பத்தி மார்க் ஃபேபர் என்னும் முதலீட்டாளர் என்ன சொல்றார்னு பாக்கனுமா? இதை படிங்க, ரொம்ப சுவையா இருக்கும்!

Thursday, December 17, 2009

கம்மா..

ஒரு வாரமா ஒரே கவலை.. என்னுடைய கம்மாவுக்கு (அம்மாவை பெத்த பாட்டி) பைபாஸ் அறுவை சிகிச்சைன்னு சொன்னவுடன் எனக்கு இங்க கொஞ்சம் கூட ஓடவேயில்லை..எனக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும்னு வீட்டுல பேசினப்ப நான் முதல்ல போட்ட கண்டிசன் வெளிநாடு போக மாட்டேன்னு தான்.. ஏர்க்கெனெவே ரெண்டு வருசம் ஹாஸ்டல்ல இருந்து வீட்ட ரொம்ப தேடிட்டேன், இனியும் ம்மா வாப்பாவை விட்டுட்டு இருக்க முடியாது, அப்புறம் முக்கியமா ஊருல நடக்குற நல்லது கெட்டதுக்கு கலந்துக்க முடியாதுங்கறதால அந்த கண்டிசன்.

ஆனா இறைவன் நமக்கு ஒரு நல்ல வாழ்ககையை வெளிநாட்டில் தான் வெச்சிருக்கான் என்றால் நாம் அதை ஏற்றுக்க தானே செய்யனும்னு வந்தாச்சு (அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் லீவு முடிஞ்சு முதல்ல இங்க வந்ததும் எப்படா விசா வரும்னு காத்துட்டு இருந்தது தனி கதை. என் தம்பி கேட்டான் "எப்படி லாத்தா இப்படி தலகீழா மாறிட்ட). கிளம்பும்போதே கம்மாக்கு தாடை வலிக்குதுன்னு சொன்ன உடன் ரொம்ப கவலையா இருந்தது. முதல்ல டாக்ட‌ரை போய் பாருங்க‌ன்னு சொன்னேன்..உங்க‌ எல்லாருக்கும் இத‌ய‌ நோய் ச‌ம்ப‌த்த‌ப்ப‌ட்ட‌ மின்ன‌ஞ்ச‌ல் வ‌ந்திருக்கும்னு நினைக்குறேன்.. அதுல‌ தெளிவா போட்டிருக்கும், தாடை வ‌லிச்சா அது இத‌ய‌ நோய் அறிகுறியா இருக்கும் என்று. நீங்க‌ளும் உங்க‌ வீட்டுல‌ உள்ள‌ பெரிய‌வ‌ங்க‌கிட்ட‌ சொல்லி வைங்க‌.

க‌ம்மாக்கு அறுவை சிகிச்சை ந‌ல்ல‌படியா முடிஞ்ச‌து, அல்ஹ‌ம்துலில்லாஹ். இப்போ ஐ சி யூவில‌ தான் இருக்காங்க‌. இன்ஷா அல்லாஹ் நாளைக்கோ நாள‌ க‌ழிச்சோ ரூமுக்கு மாத்திடுவாங்க‌.

எங்க‌ ம்மா வீட்டுல‌ நான்தான் முத‌ல் பேத்தி. நான் பிற‌ந்த‌ப்போ ந‌ட‌ந்த க‌தைக‌ளையும், கொஞ்ச‌ம் வ‌ள‌ர்ந்து பேச‌ ஆர‌ம்பிச்ச‌ப்போ நான் ப‌ண்ணின‌ குறும்புக‌ளையும் கொஞ்ச‌ம் கூட‌ ம‌ற‌க்காம‌ல் எங்க‌ க‌ம்மா சொல்லுவாங்க‌.. இன்ன‌னும் சின்ன‌ புள்ளைல‌ என் அள‌வுக்கு எந்த‌ பேத்தியும் பேசின‌தில்லைன்னு சொல்லுவாங்க‌.. (ரைமெஸ் சொல்ல‌ சொன்னா, "ஹாப் அ லிட்டில், ஜ‌ம்ப் அ லிட்டில்" என்று ஆர‌ம்பிச்சி, "ர‌ன் அ லிட்டில்"ன்னு சொல்லி அப்ப‌டியே விளையாட‌ ஓடிடுவேனாம்). ஸ்கூல் ப‌டிக்கும்போது எப்ப‌டா லீவு விடுவாங்க‌ன்னு வெயிட் ப‌ண்ணி க‌ம்மா வீட்டுக்கு போவேன்.. போனா க‌ம்மா சுட்ட‌ முறுக்கு ஒரு பெரிய‌ டின் முழுக்க‌ காத்துட்டு இருக்கும். அந்த ருசி வேறெந்த முறுக்குலயும் வாரதுங்க, உண்மையா.. அங்க‌ என்னை இடுக்கிட்டு ப‌ஜார்க்கு கூட்டிட்டு போவாங்க‌ (அப்ப‌வே ந‌ட‌க்க‌ சோம்ப‌ப்ப‌ட்ட‌ தில்லால‌ங்க‌டி நான்).

என‌க்கு அங்கிருந்து வீட்டுக்கு வ‌ர‌வே புடிக்காது. எரிச்ச‌ப்ப‌ட்டுட்டே தான் கிள‌ம்புவேன்..க‌ம்மாகிட்ட‌ நான் இங்க‌யே இருந்துக்குறேன் க‌ம்மா, இங்குள்ள‌ ஸ்கூல்ல‌யே ப‌டிக்கிறேன்னு சொல்லுவேன்.. நான் தூங்கும்போது என‌க்காக லா இலாஹா இல்லல்லாஹ்வும் தாலாட்டும் பாடுவாங்க. அந்த‌ பாட்டோட‌ வ‌ரிக‌ள் என‌க்கு நினைவில்லன்டாலும் அந்த‌ ராக‌ம் என‌க்கு ந‌ல்ல நினைவிருக்கு.


அதுக்க‌ப்புற‌ம் அவ‌ங்க‌ சென்னை வ‌ந்த‌ பிற‌கும் க‌ம்மா வீட்டுக்கு போற‌துன்டாலே ஜாலிதான்.. ஆனா க‌ல்லூரிக்கு வ‌ந்த‌ பிற‌கு நாட்கண‌க்கில‌ த‌ங்குற‌து குற‌ஞ்சிட்டு..அப்புற‌ம் எம்.பி.ஏ ப‌டிக்க‌ திருச்சி போன‌ பிற‌கு ம்மாவை ரொம்ப‌ தேடி க‌ல்யாண‌ம் வ‌ரைக்கும் அவ‌ங்க‌ள‌ பிரிஞ்சி இருக்க‌ ம‌னமே இல்லை.

இப்பொ க‌ம்மா நினைப்பு ரொம்ப‌ வாட்டுது. அவ‌ங்க‌ளுக்கு முடியாத‌ நேர‌த்துல‌ அவ‌ங்க‌ ப‌க்க‌துல‌ இருக்க‌ முடிய‌ல‌ன்னு நினைக்கும்போது ரொம்ப‌ கஷ்ட‌மா இருக்கு. என்னை எப்ப‌டியெல்லாம் வ‌ள‌ர்த்த‌வ‌ங்க‌ அவ‌ங்க‌ள‌ பாக்க‌ முடிய‌ல‌ன்னு நினைச்சா வ‌ருத்த‌ம் தாங்க‌ முடிய‌ல‌. ச‌ரி என்னாலான‌து என்னுடைய‌ துவா (பிரார்த்த‌னை) ம‌ட்டும்தான். இப்போ என் த‌ம்பி வ‌ந்த‌ப்போ கூட‌ அவ‌ன்கிட்ட‌ அவ‌ங்க‌ செஞ்ச‌ முறுக்கும் இட்லி பொடியும் குடுத்து விட்டுருக்காங்க. என‌க்கு எப்ப‌டா அவ‌ங்க‌ள‌ பாப்போம்னு இருக்கு..

Monday, December 7, 2009

அளவுக்கு மிஞ்சினால்...

மக்களே..எல்லாரும் நல்லா இருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சே.. என்ன பண்ணுறது? முதலில் வலைத்தளம் ஒண்ணு தொடங்கனும் என்று நினைத்த உடனே, துபை வந்து, செட்டில் ஆனதும் தொடங்கலாம்னு தான் நினைச்சேன்..ஆனா ஆசை யார விட்டுச்சு, ஆர்வக்கோளாறுல ஆரம்பிச்சாச்சு, ஆனா தொடர்ந்து எழுத தான் இயலல.. இன்னைக்கு ஹூசைனம்மா ரொம்ப அன்பா மெயில்ல விசாரிச்சாங்க.. அட, இனிமேலும் எழுதாம இருக்க கூடாதுன்னு வீராப்பா பழயபடி வந்த்தாச்சு..


தக்கடி போட்டதுக்காக எனக்கு விருது கொடுத்து சிறப்பித்த‌ சகோதரர் பித்தனின் வாக்கு அவர்களுக்கும், சகோதரி சாதிகா அவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி (எனக்கு சோடா பாட்டிலும், மைக்கும் நினைவுக்கு வருது..உங்களுக்கு?)

நமக்கு முன்ன பின்ன சொந்தமா சமைச்சு பழக்கமில்லாத்தால, பல நேரங்கள்ல செம்ம சொதப்பல்ஸ் ஆஃப் யு.ஏ.இ ஆகிடுது.. நேத்து ஒரு சேமியா செஞ்சேனே பார்க்கனும், எனக்கு உண்மயாகவே அவுங்கள கொடுமை படுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்.

அப்புறம் நம்ம நண்பர்கள் தொல்லை வேற தாங்க முடியல.. "ஏன்டி, நீதான் துபை வேர்ல்டுக்கு அட்வைஸ் கொடுத்தியா"ன்னு கேட்டு ஒரே தொல்லை..ஆனா துபை வேர்ல்ட விட, அதுக்கு கடன் கொடுத பிரிடிஷ் வங்கிக‌ளுக்கு அட்வைஸ் கொடுத்த‌வ‌ன‌ தான் முத‌ல்ல‌ உதைக்க‌னும்..சாத‌ர‌ண‌மா ஒரு அம்ப‌து ரூபா ஒருத்த‌வ‌ங்க‌ளுக்கு க‌ட‌ன் கொடுக்க‌னும்னாலே ஆயிர‌ம் த‌ட‌வை யோசிக்குற‌ ம‌னுச‌ன், அதெப்ப‌டி ஒரு நிறுவ‌ன‌ம் அர‌சு சார்பான‌துன்னு என்ற ஒரு விசயத்த மட்டும் வெச்சிட்டு, ஆயிர‌ம் ஆயிர‌மா கோடிகளைகொட்டி கொடுக்குறாங்க‌?

துபை வேர்ல்ட்டுக்கும், அத‌னுடைய‌ துணை நிறுவ‌ன‌மான‌ நகீலுக்கும் (அதாங்க‌, க‌ட‌ல்ல‌ பேரிச்ச‌ ம‌ர‌த்த‌ போல‌ தீவுக‌ளை க‌ட்டி, அதுல‌ ஹோடெல்க‌ளும், வீடுக‌ளும் க‌ட்டி விக்குறாங்க‌ளே) க‌ண்ண‌ மூடிட்டு, அதனுடைய‌ ஆடிட் செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளை எல்லாம் பார்க்காம‌ எப்ப‌டித்தான் இவ்வ‌ள‌வு கொட்டி கொடுத்தாங்க‌ளோ..

எப்ப‌டியோ, கொஞ்ச‌ நாளைக்கு மீடியாக்க‌ளுக்கு ந‌ல்ல‌ தீனி தான்.. எப்ப‌டியும் அவ‌ங்க‌ இன்னும் க‌ட‌ன த‌ர‌ மாட்டேன்னு சொல்ல‌ல, ஆறு மாச‌ம் ஆர‌ப்போட‌த்தான் சொல்லிருக்காங்க‌.. அபு தாபியும் உத‌விக்க‌ர‌ம் நீட்டுது, பாப்போமே, என்ன‌ தான் ந‌ட‌க்க‌ போகுதுன்னு.ஒரு வேளை க‌ட‌ன‌ அடைக்காம‌ விட்டுட்டா, உல‌க‌ அள‌வுல‌ பெருசா பாதிப்பில்லைன்டாலும் இங்க‌ க‌ண்டிப்பா ஒரு க்ரெடிட் க்ரன்ச் (வ‌ங்கிக‌ள் க‌ட‌ன் மூல‌மா இருக்கும் ப‌ண‌ப்புழ‌க்க‌ம்) ந‌ட‌க்கும்னு நான் நினைக்குறேன்..

இவ்வ‌ள‌வு குள‌றுப‌டிக‌ளுக்கும் கார‌ண‌ம், காசு தான் எளிதா கிடைக்குதேன்னு க‌ண்ட‌தையும் செய்ற‌து.. இதை நாம‌ த‌னிப்ப‌ட்ட‌ முறையில‌யும் செய்யுறோம், ஒரு கூட்டா பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் செய்யுது..எப்ப‌வுமே ந‌ம்ம‌ தேவைக்கு மீறி எதை செய்தாலும், அதிலும் ஒரு வ‌ரைமுறை இருக்க‌னும்.. காசு இருக்கேன்னு ஊர‌ சுத்த‌லாம், ஆனா க‌ட‌னுக்கு வாங்கி சுத்த‌னுமா என்ன‌? இது ஒரு இட‌த்தோட‌ இருக்காது, ரிப்பிள் எஃப்க்ட் என‌ சொல்ல‌ப்ப‌டும் அது சார்ந்த‌ அதிர்வுக‌ள‌ ஏர்ப‌டுத்திட்டே தான் இருக்கும்..
க‌ட‌னை ப‌ற்றியும், வ‌ட்டியை ப‌ற்றியும், வியாபார‌த்தை ப‌ற்றியும் இஸ்லாம் என்ன‌ சொல்லுத்துன்னு பார்த்தா ரொம்ப‌ ஆச்ச‌ர்ய‌மா இருக்கு..ஒரு நிதி நிர்வாக‌ துறையை சேர்ந்த‌ என‌க்கு புரிஞ்ச‌த‌ கூடிய‌ சீக்கிர‌ம் உங்க‌ளிட‌மும் ப‌கிர்ந்துக்க‌றேன்..

Thursday, November 26, 2009

ஐ! இன்னொரு விருது!!

இந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சே.. மேட்டர் என்னன்னா, எனக்கு கூகிள பயன்படுத்தியே பழக்கமாயிட்டதால மற்ற தமிழ் எழுதிகளை பயன்படுத்துறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..அன்பு சகோதரிகள் ஜலீலாவும் ஹுஸைனம்மாவும் சொன்ன தமிழ் எடிட்டரை வைத்து தான் எழுதுறேன்..

முதல்ல எனக்கு விருது குடுத்த சகோதரி மேனகாவுக்கு ஒரு பெரிய சைஸ் நன்றி.. ஹி ஹி.. என்னோட மொக்கைக்கும் விருது குடுக்குறாங்கன்னா அது ரொம்ப பெரிய விஷயம்.. ரொம்ப நன்றி, சகோதரி!! :)




‍‍‍‍‍‍நாளைக்கு இன்ஷா அல்லாஹ் பெருநாள்...இன்னைக்கு அரஃபாத் நோன்பு.. அவுங்களுக்கு இன்னைக்கும் ஆஃபீஸ்.தனியாத்தான் நோன்பு திறக்கனும்.. ஹ்ம்ம்ம்..இப்ப வீட்டு நினைப்பு ரொம்ப வாட்டுது..வீட்டுல பெருநாள் வந்துட்டாலே,முதல்ல துணி, மணியெல்லாம் வேங்கிட்டு, அவசர அவசரமா தைக்க குடுத்துட்டு, அத வேங்க போகும்போது மருதாணி வேங்கிட்டு, வீட்டுக்கு வந்தா சாச்சிமார் எல்லாருக்கும் மருதாணி விட்டுட்டு, கதை பேசிட்டே இருக்கும்போது தூக்கம் கண்ண கட்டும், ஆனா தூங்க மனசு வராது..


சென்னையில எங்க வீடு இருக்குற இடம் நல்ல கல, கலன்னு இருக்கும். நல்ல மார்கெட் ஏரியா..பெருநாளப்போ தெருவே களை கட்டிடும்.. எங்க வீட்டுல இருந்து கூடுதலா ஃப்ளட் லைட்டெல்லாம் போடுவாங்க.. அதை பார்க்கவே அழகா இருக்கும்.. நானும் என் தம்பியும் இன்னும் சாச்சா புள்ளைங்க்ளும் சேர்ந்து மொட்டை மாடிக்கும் வீட்டுக்குமா அலைஞ்சிட்டு இருப்போம்..ம்மா, சாச்சிமார், வாப்சா எல்லாரும் முற்றத்துல உட்கார்ந்து இஞ்சி, பூண்டு உரிச்சிட்டு இருப்பாங்க.. மேல மாடியில பிரியாணி ஆக்க ஆட்க்ள் எல்லாம் வந்துகிட்டு இருப்பாங்க.. அப்போ அந்த சட்டிய பார்க்கவே ஆசையா இருக்கும்.. கொஞ்ச‌ம் நேர‌ஞ்சென்டு போனா, ஸ்வீட் செஞ்த‌ த‌ருவாங்க‌.. ஹ்ம்ம்ம்..
என‌க்கு பெருநாள் அன்னைக்கு செய்ற‌ பிரியாணிய‌ விட‌, காலைல‌ ப‌சியாற‌ செய்யும் இட்லி, க‌றி உருளைக்கிழ‌ங்கு ஆன‌ம், வ‌ட்ட‌ல‌ப்ப‌ம், பாயாச‌ம் தான் புடிக்குமே.. பெருநாள் தொழுகை முடிஞ்ச‌தும் ந‌ல்லா ஒரு புடி, புடிக்க‌லாம்..கையில‌ ம‌ருதாணி வாச‌த்தோட‌ சாப்ட்ற‌தே ஒரு த‌னி சுக‌ம் தான்.. :)

ஹ்ம்ம்...ச‌ரி ரொம்ப‌ சென்டியாகிட்டேன்.. ப‌ர‌வால்ல‌. இங்க‌ பெருநாள் கொண்டாட‌ அவுங்க சொந்த‌ கார‌வ‌ங்க‌ வீட்டுக்கு போறோம், இன்ஷா அல்லாஹ்.. :) க‌ல்யாண‌ம் முடிஞ்ச‌துக்கு அப்புற‌ம் இது தான் முத‌ல் பெருநாள்.. :) ஆவ‌லுட‌ன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..



எல்லாருக்கும் ஹ‌ஜ்ஜு பெருநாள் ந‌ல்வாழ்த்துக்கள்.. இறைவ‌னின் அருட்கொடையை எண்ணி, அவ‌னுக்கு ந‌ன்றி செலுத்தி, சிற‌ப்பாக‌ கொண்டாடுவோம்..

Friday, November 13, 2009

ஒரு விருது, ஒரு தட்டு தக்கடி



நம்ம ஜலீலா லாத்தா ஒரு விருது குடுத்துருக்காங்க.. அபப்டியே புல்லரிச்சு போயிட்டேன்.. பின்ன நாம எழுதுற மொக்கைக்கு அவார்டெல்லாம் குடுக்குராங்கப்பன்னு தான்.. இருந்தாலும் ரொம்ப உற்சாகமா இருக்கு.... நன்றி லாத்தா..
எங்க ஊரு பக்கம் (அதான் நெல்லை சீமை- அருவாக்கும் அல்வாக்கும் பெயர் பெற்ற ஊரு!) பல உணவு பண்டங்கள் அரிசிய வெச்சு செய்வாங்க.. நிறைய பேருக்கு முஸ்லிமுன்னு சொன்னாலே பிரியாணி தான் நினைவுக்கு வரும்.. ஆனா சத்யமா எங்க வீட்டுல பிரியாணி செய்ய தெரிஞ்சவங்கள விரல் விட்டு எண்ணிடலாம்... எங்கும்மாக்கு சுத்தமா வரவே செய்யாது.. என் தம்பி சொல்லுவான் "ம்மா, நீ எது வேணும்னாலும் செய், ஆனா டிவி ல கண்டதையும் பாத்துட்டு பிரியாணி மட்டும் செய்யாதம்ம்மா"... அந்த அளவுக்கு தான் பிரியாணி.. ஆனா என்ன, பெருநாள், கல்யாண நேரங்கள்ல வெளிய ஆள் வெச்சு ஆக்கிட வேண்டியது தான்.. :)

நெய்சோறு, கரி ஆனம், வட்டலப்பம், இடியப்பம், ஆப்பம், புட்டு, அரிசிமா ரொட்டி, தக்கடி, வெள்ளை கஞ்சி இதெல்லாம் எங்க ஊர்ல ரொம்ப விசேஷம். .. எனக்கிதுல பிடிச்சது தக்கடி..

டைப் பண்ணும்போதே வாய் ஊறுதுங்க.. எனக்கு அவ்வளவு புடிக்கும்... ஆனா கொஞ்சம் செயற்முறை கஷ்டமா இருக்குற மாதிரி இருக்கும்.. என்கும்மா எது செஞ்சாலும் ரொம்ப எளிதா செஞ்சிடுவாங்க.. அதுல ஒன்னு தான் இந்த சாப்பாடும்..
நான் செஞ்ச தக்கடி:




செய்முறை (யப்பா... கடைசில நானும் சமையல் பதிவெல்லாம் போடுறேன் பா!)

தேவையான பொருட்கள்:

தக்கடிக்கு

- தேங்காய் துருவி போட்ட அரிசி மாவு- இரண்டு கப்

-பொடியாக அறிந்த வெங்காயம் சிறிதளவு

-பச்சை மிளகாய் சிறிதளவு

-உப்பு, தேவைக்கேற்ப

லேசா சுடுதண்ணிய தெளிச்சு சின்ன சின்னதா கொழுக்கட்டை புடிச்சி வெச்சுக்கோங்க.

ஆனத்திற்கு:

-இரண்டு தக்காளி

-மூன்று அல்லது நான்கு பெரிய வெங்காயம்

-பச்சை மிளகாய் சிறிதளவு (நறுக்கியது)

-இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு

-மிளகாய், மல்லி, உப்பு தூள்- தேவையான அளவு

-ஆட்டிறைச்சி அரை கிலோ

எண்ணெய் காய்ஞ்சதும் இஞ்சி பூண்டு போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு அது வதங்கியதும் தக்காளியை சேத்துக்கோங்க.. அதுல எல்லா மசாலா தூளையும், உப்பையும் போட்டு, நல்ல வதங்குன பிறகு கறிய போட்டு நல்ல தண்ணி ஊத்தி குக்கரை மூடி, அஞ்சு விசில் வர வரைக்கும் வைங்க..

குக்கரை திறந்து, கறி வெந்துட்டான்னு பாத்துக்கோங்க. ஆனம் கொஞ்சம் தண்ணியா இருக்கணும்.. அதுல ஒவ்வொன்னா புடிச்சு வெச்ச தக்கடிய போடுங்க.. ஆனம் அதுல நல்லா இறங்கினதும் அப்படியே கெட்டியாகிடும்.. ஐயோ எனக்கு வாய் ஊறுதுங்க.. நான் எஸ்கேப்

Saturday, November 7, 2009

அரபி காரங்க மண்டையும், அதுல உள்ள கொண்டையும்..

அதாவது என்னன்னா, மேடம் இப்பல்லாம் ரொம்ப பிஸி மாதிரி.. இல்லத்தரசி இல்லையா? சமைக்கணும் இல்லையா? எல்லாரும் கேக்குறாங்க 'how was your cooking experience?' அப்படின்னு.. எனக்கு தானே தெரியும் அது experience இல்லை, experiment என்று! ஹிஹி... பாவம் எங்க வீட்டுல உள்ளவங்கதான்.. போன வாரம் ஒரு சொதப்பல் ரசம் வெச்சு அவங்களுக்கு கட்டி குடுத்துட்டேன்... பாவம் அவங்க அலுவலகத்துல கிட்டத்தட்ட மானம் போய்ட்டாம் (ஆனா பாருங்க, ரசம் மட்டும் தான் சொதப்பல், மத்த இதெல்லாம் நல்லா தான் செய்றேன்னு சொன்னாங்களாக்கும் ;) )

துபைக்கு கெளம்பறேன்னு எல்லார்கிட்டயும் பயணம் சொல்லும்போது, சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும் கேட்ட கேள்வி: "துபாய் ல எங்க, மெயின் ரோட்டுக்கு பக்கத்துலயா? பஸ் ஸ்டாண்ட ஒட்டியா?". இங்க வந்ததுல இருந்து துபாய் பஸ் ஸ்டாண்ட் எங்க இருக்குன்னு பாக்க ரொம்ப ஆவலா இருந்தது, நேத்துதான் காண கிடைச்சுது.. நேத்து தெரிஞ்சவங்க ஒருத்தவங்க வீட்டுக்கு ஷார்ஜாவுக்கு போனோம், அங்க அவங்க வீடு உண்மையாவே கொஞ்சம் பஸ் ஸ்டாண்டுக்கும், மெயின் ரோடு (அதாங்க அந்த பெரிய பிரிட்ஜ்) பக்கத்துல தான் இருந்துச்சு! :)

துபாய்  வந்து சேர்ந்த உடன கண்ணை ஸ்கேன் பண்ண வரிசைல நிண்டுட்டு இருந்தேன்... அரபிகாரங்களை தொலைக்காட்சியில பார்த்தாலும் நேர்ல பாக்குறது அது தான் முதல் தடவைன்னு நினைக்கிறேன்.. அவங்க தலைல இருந்த அந்த கருப்பு வட்டத்தை பார்த்ததும் எனக்கு எங்க வீட்டுல இருக்குற கலவடை நினைவுக்கு வந்துட்டு (அதான் அடுப்புல இருந்து இறக்கி வைக்க ஒரு ரிங் இருக்குமே, அது).. உடனே அவர் தலைல ஒரு சட்டிய வைச்சா எப்படி இருக்கும்னு நினைச்சிட்டு இருக்கும்போதே என் முறை வந்துட்டு.. போனா 'ஆங்கொன் , தேகோ' ன்னு  ஏதோ ஹிந்தியில சொல்றார்.. நமக்கு தான் ஹிந்தி வரதே, நான் சொன்னேன், 'i don't understand hindi', அப்புறம் அவர் கேட்டார் 'you're from India, you don't know Hindi?', அடுக்கு நான் 'no, I speak Tamil' அப்படின்னு சொன்னேன். அடுத்த கேள்வி தான் காமெடியே, அவரு "then what language you know" அப்படின்னு கேட்டப்போ எனக்கு வந்துச்சு பாருங்க, மனசுக்குள்ள "அடப்பாவி மனுசா, இவ்வளவு நேரம் எதுல பேசிட்டு இருந்தேனாம்னு நினைச்சிட்டே, English please" ன்னு சொல்லி தப்பிச்சேன்!

சரி இங்க உள்ள அரபி பொண்ணுங்களுக்கும் தலை ரொம்ப வித்தியாசமா தான் இருக்குதுங்க.. ஆமா... தலைல ஏதோ ஸ்டாண்ட் அடிச்சு அதை சுத்தி துணிய போட்டுருக்குற மாதிரி இருக்கு... அது தான் இப்ப பேஷன் போல... ரொம்ப இருக்கமா உடை அணிஞ்சிட்டு பேருக்கு சும்மா தலைல துணிய சுத்தி இருக்காங்க.. என்னமோ... மேலை நாடுகள்ல ஹிஜாபை கடைபிடிக்க சாலைல வந்து போராட வேண்டி இருக்கு... இங்கு இவ்வளவு சுதந்திரம் இருந்தும் இப்படி இருக்குறாங்க.. அவங்க எங்க, இவங்க எங்க!

அல்லாஹ் தான் எல்லா மக்களையும் காப்பாத்தனும்..

Wednesday, November 4, 2009

பிடித்தவர்/பிடிக்காதவர்

ஒரு வழியா துபாய் வந்து சேர்ந்தாச்சு.. தனியா சமைக்கவும் பழகியாச்சு (சரி, சரி..என்ன செய்ய, எங்க வீட்ல உள்ளவங்க தல விதி அவ்வளவு தான்).. இப்ப பிரியாணி கடையையும் திறந்தாச்சு..

பீர் அண்ணே தொடர் விளையாட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.. ரொம்ப நன்றி! ஹிஹி.. சரி ரொம்ப பேசாம விஷயத்துக்கு வாரேன்:

1. அரசியல் தலைவர்


பிடித்தவர்: ஜெயலலிதா

பிடிக்காதவர்: கலைஞர் (ஆட்டோ வருமோன்னு பயம்மா இருக்கு பா)

2. எழுத்தாளர்

பிடித்தவர்: கல்கி (பொன்னியின் செல்வன்!!!!!)

பிடிக்காதவர்: மதன்

3. கவிஞர்

பிடித்தவர்: தாமரை

பிடிக்காதவர்: பா. விஜய்  (கேவலமான
 குத்து பாடல்களுக்காக)

4. திரைப்பட இயக்குனர்

பிடித்தவர்: பாண்டியராஜன் (ஆண் பாவம் ஒரு படம் போதும்)

பிடிக்காதவர்: கே. பாலசந்தர்

5. நடிகர்/கை

பிடித்தவர்: பத்மினி 

பிடிக்காதவர்: விஜய் 

6. விளையாட்டு வீரர்

பிடித்தவர்: விசுவநாதன் ஆனந்த்

பிடிக்காதவர்: ஜோஷ்னா சின்னப்பா

7. தொழில் அதிபர்

பிடித்தவர்: சாந்தி துரைசாமி ( சக்தி மசாலா)

பிடிக்காதவர்: ராஜகோபால் (சரவணபவன்)

கேள்வின்னு வந்தாலே எல்லாமே மறந்து போகுது.. விளையாட்டின் விதிகள் இங்கே.

நான் அழைக்க விரும்புவது:
 
1. விக்னேஸ்வரி 
2. அன்புடன் மலிக்கா 
 
 

Friday, October 23, 2009

வீராசாமி-The Man of Action!!

என்ன முழிக்கிறீங்க? எல்லாரும் எந்திரன்  படத்துக்கே விமர்சனம் எழுத தொடங்கிட்டதுக்கு அப்புறம் ரெண்டரை வருடம் முன்ன வந்த வீராசாமிய பத்தி இப்ப எழுத வாரேன்னு தானே?

அப்படி சாதரணமா விட்டுட முடியுமா? அந்த படத்தையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நாளையும்? அது எந்த நாளுன்னு கேக்குறிங்களா? அது தான் நாங்க மூணு பேரு திருச்சி ரம்பா ஊர்வசி திரையரங்கத்துல தலைவர் படத்த பார்த்த நாளு!

ஹ்ம்ம்..நிறைய பேருக்கு நான்னா, TR நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நான் அவர் ரசிகை.. ஆமாங்க..நம்புங்க.. அவரு படத்துல அவரு உதிர்த்த முத்துக்களை எல்லாம் சேகரிச்சு நிஜ வாழ்கையில பாவிக்கிற ஆளு நான்! எப்படின்னு யோசிக்கிறீங்களா? நல்லா யோசிங்க, அதை அப்புறமா இன்னொரு நாள் பொறுமையா போடுறேன்.. (பின்ன பதிவெழுத மேட்டர் வேணாமா?)

அப்படிப்பட்ட தலைவர் ரசிகையாகிய நான், அவரு படம் தியேட்டர்ல வரும்போது பார்க்காம சும்மா விடுவேனா?? ரம்பா ஊர்வசியில ஓடுதுன்னு தெரிஞ்சதும் முதல் வேலையா கிளாஸ்ஸ பங்க் பண்ணிட்டு நானும் கோகியும் ஸ்கூட்டிய BHEL ஸ்டாண்ட்ல விட்டுட்டு சத்ரதுக்கு பஸ் ஏறிட்டோம்.. அங்க ஒரு வேலை முடிஞ்சதும் Femina Shopping Mall (ஆமாங்க, அது தான் திருச்சியோட சிட்டி சென்டெர்.. எங்களுக்கு நல்லா பொழுது போகும்) போயிட்டு காயுக்கு போன் அடிச்சோம்.. அவ கெளம்பி வாரேன்னு சொன்னதும், அதுக்குள்ள லஞ்ச் சாப்டுட்டு பஸ் ஸ்டாண்ட்ல அவ வந்ததும் தியேட்டருக்கு நடக்க ஆரம்பிச்சோம்.. போற வழியில டிக்கெட் முன்பதிவு செய்யலையே, ஹவுஸ் புல் ஆகிடுமோன்னு ஒரே கவலை... அட உண்மையத்தாங்க சொல்றேன்..

அங்க வேர்த்து விறுவிறுத்து ஒரு வழியா போனா டிக்கெட் ஈசியா கிடைச்சிட்டு.. இருந்தாலும் நல்லா கூட்டம்..பின்ன தலைவர் படமாச்சே.. அங்கல்லாம் இங்க மாதிரி டிக்கெட் நம்பர் கிடையாது.. எங்க வேணும்னாலும் உட்காரலாம்.. அப்படி எங்க இருக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ ரெண்டு பேரு பேசிட்டே வாராங்க:  "டேய் வடிவேல் படம் பாக்குற மாதிரி ஒரே காமெடியா   இருக்கும்டா, டைம் போறதே தெரியாது" ன்னு சொல்லிட்டே அவங்க சீட்ட தேட ஆரம்பிச்சுட்டாங்க.. சரி தலைவருக்கு இவ்வளவு கூட்டம் வருதேன்னு சந்தோஷமா ஸ்டார்டிங் சீன போட்டான் பாருங்க.....

அப்படி ஒரு சர வெடி..ரவுடி பசங்களெல்லாம் கலாட்டா  பண்ண, அவங்கள அடிக்கிறதுக்கு அப்படியே ஒரு குடிசைக்குள்ள இருந்து வர்றார்: அப்படியே வெடிக்குது அந்த குடிசை... அந்த பைட் சீனுக்கு அப்புறம் என்ன இருக்கணும்? சரியா சொன்னா படத்துல அவரு பயன்படுத்தின சீப்பு உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்..

எல்லாரும் சரியா சொல்லிட்டீங்க.. உங்க வாசகதவ யாராச்சும் தட்டினா குரியர் காரரா இருக்கும். பொய் கையெழுத்து போட்டுட்டு சீப்ப வாங்கிக்கோங்க.

அந்த தங்கச்சி செண்டிமெண்ட் சீனுல தங்கச்சி ஜீன்ஸ் பேன்ட் வாங்கிக்கேட்டதும்  தலைவர் கண்கலங்கி திரும்பி பார்ப்பார் பாருங்க, அதுல தியேட்டரே சும்மா அதிர்ந்துதுங்க... அப்புறம் ஒரு டயலாக் விடுவார் "ஏம்மா, நம்மள வளர்த்தது ஒரு இட்லிகட ஆயா, அதனால நாம ஜீன்ஸ் எல்லாம் போடா கூடாதும்மா".. இப்படி ஒரு சமூக நீதிய நம்ம தலைவர தவிர வேற யாராச்சும் யோசிக்க முடியுமா?

அப்புறம் படத்தோட ஹீரோயின் மும்தாஸ்.. அவங்களுக்கு ரொம்ப வித்தியாசமான வேடம்னு டைட்டில்ல போட்டாங்க.. என்ன வித்தியாசமான நடிப்பு தெரியுமா அது? மும்தாசுக்கு வில்லனோட கல்யாணம் ஆயிட்டதுக்கு அப்புறம் தலைவர் எப்படிலாமோ பீல் பண்ணுவாரு.. அதுல முக்கியமானது: ஒரு நாள் தலைவர் தாடிய சீவுன சீப்பை அந்தம்மா மறைச்சு வெச்சிகிட்டு விளையாடும், தலைவர் அத புடிங்கிப்பார்.. அப்புறம் அந்த சீப்பா பார்த்து அழுது, பீல் பண்ணி, திரும்பவும் தாடிய சீவிக்குவாரு... என்னமா பீலிங்க்ஸ் ஒப் இந்தியா பாத்திங்களா? By the way, அந்த சீப்பு தான் உங்களுக்கு பார்சல்ல வந்துருக்கும்..

கதை எப்படி எல்லாமோ போயி, கடைசில சொன்ன வாக்க காப்பத்த முடியலயேன்னு தலைவர் நாற்காலியில உட்கார்ந்த மாதிரியே மண்டைய போட்டுருவாரு.. அவ்வளவு தான் முடிஞ்சுதுன்னு எல்லாரும் எந்திக்க, கொஞ்ச நேரத்துல மும்தாசும் மண்டைய போட்டுருவாங்க..எல்லாரும் அப்படியே சிலிர்த்து, கை தட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. பின்ன எப்படியாப்பட்ட காவியம் இது!

மறு நாள் கொல்லெஜுக்கு வந்து எல்லார் கிட்டயும் படத்த பார்த்த பெருமையும், கூடவே 'அகில உலக TR ரசிகர் மன்ற MBA பிரிவு தலைவி' ங்கற பட்டத்தையும் வாங்கிகிட்டு சந்தோஷமா பொழுத கழிச்சேன்!

Thursday, October 15, 2009

MBA படிக்க போறீங்களா?

ஏதோ நமக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்கலாமேன்னு. இதுல நிறைய விஷயம் உங்களுக்கு ஏற்கெனெவே தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும்:




MBA வை பொறுத்த வரைக்கும் இன்ன படிப்பு தான் படிச்சிருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க UG எந்த துறைல செய்திருந்தாலும் MBA படிக்கலாம். ஆனா அக்கவுண்ட்ஸ், காமர்ஸ் படிச்சவங்களுக்கு தொடக்கத்துல கொஞ்சம் எளிதா இருக்கிற மாதிரி  இருக்கும். அதெல்லாம் முதல் வருஷம் மட்டும் தான், இரண்டாவது வருஷத்துல எல்லாருமே சமமா தான் இருப்பாங்க.


எந்த கல்லூரியில படிக்கிறதுன்னு முடிவு பண்ண முன்ன, எப்படிப்பட்ட MBA பண்ண போரோம்கிறது முக்கியம். எனக்கு தெரிஞ்சு இந்த படிப்ப நாலு வகையா பிரிக்கலாம்:


  • CAT, XAT, RAT (ஹிஹி,,, இது சும்மா தமாசுக்கு) எழுதி  B-Schools எனப்படும் பெரிய, பை நிறைய சம்பளம் கொடுக்கம் நிறுவனங்கள் வருகை தரும், பல முன்னணி ஏடுகள் தரவரிசை பட்டியலில் இடம்பெறும் IIM, XLRI, போன்ற கல்லூரிகள் 
  •  TANCET எழுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர்வது (பெரும்பாலும் இன்ஜினியரிங் கல்லூரிகளில்)
  • All India Management Association (AIMA) நடத்தும் MAT எழுதி அந்த தேர்வை ஏற்கும் சில கல்லூரிகளில் படிப்பது
  • IGNOU, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தொலை தூர கல்வி பயில்வது
  • ஏற்கெனெவே வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் ஒரு வருட Executive MBA வகுப்புகள். இதில் ISB- ஹைதராபாத் தான் இந்தியாவிலேயே முதலிடம். இன்னும் ஏன், உலகளவில் அங்கீகாரம் பெற்றதும் கூட. நம் சென்னையிலும் Great Lakes Institute of Management இத்தகைய பட்டத்தை வழங்குகிறது
மேற்கொண்டு செல்வதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கொள்கிறேன்: MBA விற்கும்  IIM போன்ற கல்லூரிகள் கொடுக்கும் PGDBM, PGDBA போன்ற பட்டத்திற்கும் ஒரு வித்தியாசம் தான்; பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தால் அது MBA, தன்னிச்சையாக ஒரு institute பட்டம் கொடுத்தால் அது PGDBA/PGDBM அவ்வளவே.

முதலில் நீங்க எந்த மாதிரி MBA படிக்க போறீங்கன்னு முடிவு செஞ்சுக்கோங்க. MBA வை பொறுத்த வரை நீங்க எந்த கல்லூரியில படிக்கிறீங்கன்றது ரொம்ப ரொம்ப முக்கியம். எப்பவும் B School Ranking என்று பல முன்னணி இதழ்கள், AC Nielsen போன்ற சர்வே நிறுவனங்கள் வெளியிடும். அதுல எப்பவும் முதல் இருபது-முப்பது கல்லூரிகளுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. இருந்தாலும் ஒரு விஷயத்த ஞாபகத்துல  வெச்சுக்கோங்க, இது போன்ற தர வரிசையில் கூட நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதனால எப்பவும் நம்மால முடிஞ்சா நல்ல ஆராய்ச்சி பண்ணின பிறகு தான் எந்த கல்லூரின்னு தேர்ந்தெடுக்கணும்.

ஒரு வேளை நீங்க CAT, XAT போன்ற தேர்வுகளை எழுதிட்டு, IIMs ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். அல்லது நீங்க தேர்ந்தெடுத்த கல்லூரிகள்ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். நீங்க இந்த தேர்வு எழுதினத  வெச்சிட்டு உங்களுக்கு நிறைய உப்புமா கல்லூரிகள்ல இருந்து தானாகவே அழைப்பு வரலாம். எந்தெந்த கல்லூரிகள்ல சேர ஐடியா இருக்கோ, அதை பத்தி நம்மாலான ஆராய்ச்சிய தொடங்கணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். அங்க படிச்ச மாணவர்களிடம் இது போன்ற கேள்விகளை கேட்கலாம்:

  •  Specialization: MBA வில் கண்டிப்பா நமக்கென்ன துறை பிடிக்குதோ, அந்த துறையில் அந்த கல்லூரி பெயர் பெற்றிருக்கான்னு பார்க்கும். சில கல்லூரிகள்ல சில துறைகளுக்கு மதிப்பே இருக்காது. அங்க நீங்க அந்த துறை எடுத்த, கரை செற்றது கஷ்டமா போய்டும்.
  • Placements: எனக்கு தெரிஞ்சு யாரும் அறிவை வளர்க்குரதுக்கு MBA படிக்கலை. முக்கால்வாசி பேர் தங்களுடைய சம்பள அளவு உயரனும்னு தான் படிக்கிறாங்க. அதனால நீங்க படிக்கச் போற இடத்துல நூறு சதம் placemens இருக்கான்னு பாக்கணும். அதே போல மாணவர்கள் கட்டாயம் எதுவும் இல்லாம தங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு மட்டும் apply பண்ணும் வசதி இருகான்னும் பாக்கணும்
  • Faculty: எத்தனை பேர் நிரந்தர விரிவுரையாளர்கள், எத்தனை பேர் அப்பப்போ வரும் visiting faculty என்று பாக்கணும். பொதுவா பெரிய பெரிய பொறுப்புகளள இருக்குற சில பேர் தங்களுடைய ஆர்வம் காரணமாக வந்து சொல்லி கொடுப்பாங்க, அது நம்மளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். எந்தெந்த நிறுவனங்கள்ல இருந்து வாரங்கன்றத நாம கண்டிப்பா தெரிஞ்சிகிட்டா  நல்லது
  • Infrastructure: எல்லாம் ஒழுங்க இருந்தா தான் நமக்கும் படிக்கச் வசதியா இருக்கும். விடுதியில இன்டர்நெட் வசதி தங்கு தடையில்லாம வருதா, நாம ஆராய்ச்சி பண்ண வசதியா database களுக்கு சந்தா செளுதியிருகா, போன்றவைகளை கவனிச்சிக்கணும்
சரி, எல்லாத்தையும் சொல்லி இதையும் சொல்லிடறேன். B School களில் படிச்சா ஒரு பாஸ்போர்ட் மாதிரி, அவ்வளவு தான். அதுக்கப்புறம் ஒவ்வொருதர் உயர்வை அடையறதும் அவரவர் திறமையை பொறுத்தே. எங்களுக்கு சொல்லி கொடுத்தவர்கள்ள, IIM-A ல படிச்சிட்டு வந்து கேவலமா சொல்லி கொடுத்தவங்களும்  இருந்தாங்க, நம்ம Madras University ல படிச்சிட்டு சூப்பரா சொல்லி கொடுத்தவங்களும் இருக்காங்க.

அடுத்த பதிவில் தமிழ் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகள், எந்தெந்த துறைய தேர்ந்தெடுப்பதுன்னு பாப்போம்.